�நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஷகிலா நடித்துள்ள ஷீலாவதி என்ற திரைப்படத்துக்குத் தணிக்கைக் குழு அனுமதி மறுத்துள்ளது.
ஷகிலா 16 வயதில் மலையாள சினிமாவில் அறிமுகமானவர். பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் விரைவிலேயே பிரபலமானார். எந்த டாப் ஹீரோக்களுடனும் நடிக்காமல் தனித்து சாதிக்க முயன்று வெற்றி பெற்றவர். மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் முன்னணி ஹீரோ படங்களின் வசூலைத் தாண்டிச் சென்றன. இதனால் சில ஹீரோக்கள் ஷகிலா படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் கேரளாவில் தடை விதிக்க வேண்டும் என்று கூறினர்.
இந்த நிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷீலாவதி என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார். இது அவரது 250ஆவது படமாகும். கேரளாவில் நடந்த பல பாலியல் உண்மைச் சம்பவங்களை வைத்து இந்தக் கதை உருவாகியுள்ளது. இது சர்ச்சைக்குரிய கதை என்று கூறித் தணிக்கைக் குழு இந்தப் படத்துக்குத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷகிலா, அதில் “படத்தைப் பார்க்காமலேயே தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. இந்தப் படத்துக்கு ஷீலாவதி என்ற தலைப்பு பொருத்தமற்றது என்பதை தணிக்கைக் குழு எப்படிக் கூற முடியும் என்று தெரியவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் கருத்துச் சொன்னால்கூட ஏற்பதா, வேண்டாமா என்று கூற முடியும். அப்படி இருக்கும்போது தன்னிச்சையாக இப்படி முடிவெடுப்பதை ஏற்க முடியாது. தணிக்கைக் குழு தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,