காஷ்மீரில் கடந்த பிப்ரவரி `14ஆம் தேதி, புல்வாமா மாவட்டத்தில் துணைநிலை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் தங்கள் உயிரை நாட்டுக்காகத் தியாகம் செய்தனர்.
தங்களது உயிரைப் பணயம் வைத்து நாட்டைப் பாதுகாக்க எல்லையில் போராடும்
ராணுவ வீரர்கள் அவ்வப்போது விடுமுறை கிடைக்கும்போது வீட்டுக்குச் சென்று தங்களது குடும்பங்களின் இன்ப துன்பத்தில் பங்கேற்கின்றனர்.
அந்தவகையில் காஷ்மீர் மாநிலத்தில் துணை நிலை ராணுவ வீரர்கள் 2,547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் கடந்த வியாழனன்று ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தங்கள் இன்னுயிரை நீத்த 40 பேரின் குடும்பங்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது. எனினும் தங்களது மகன்களை, கணவன்மார்களை, தந்தைகளை பிரிந்துவாடும் குடும்பத்தினரின் துயரத்தை கூற வார்த்தைகள் இல்லை.
இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் குடும்ப பின்னணியும், இறுதி நிமிடங்கள் குறித்த தகவல்களும் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
*உயிரிழந்த 40 வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு*
** உத்தரப் பிரதேசம்**
கான்ஸ்டபிள் மகேஷ் குமார், பிரதீப் குமார், கவுசல் குமார் ராவத், பிரதீப் சிங்,
ஷ்யாம் பாபு, பங்காஜ் குமார் திரிபாதி, அஜித் குமார் ஆசாத், அமித் குமார் விஜய் கர் முர்யா, ரமேஷ் யாதவ் ,தலைமை கான்ஸ்டபிள் ராம் வகீல், ஆவ்தேஷ் குமார் யாதவ்.
**ஜம்மு மற்றும் காஷ்மீர்**
தலைமை கான்ஸ்டபிள் நசீர் அஹ்மத்
**பஞ்சாப்**
கான்ஸ்டபிள் சுகிஜிந்தர் சிங், மனிந்தர் சிங் அட்ரி, குல்வீந்தர் சிங்
,தலைமை கான்ஸ்டபிள் ஜமால் சிங்,
**ராஜஸ்தான்**
கான்ஸ்டபிள் ரோகிதஷ் லம்பா, பாகிராத் சிங், ஜீத் ராம், தலைமை கான்ஸ்டபிள் நாராயண் லால் குர்ஜர், ஹெம்ராஜ் மீனா.
**இமாச்சல பிரதேசம்**
கான்ஸ்டபிள் திலக் ராஜ்,
** ஜார்கண்ட்**
தலைமை கான்ஸ்டபிள் விஜய் சோரங்,
** கேரளா**
கான்ஸ்டபிள் வசந்த குமார்
** தமிழ்நாடு**
கான்ஸ்டபிள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன்
**ஒடிசா**
கான்ஸ்டபிள் மனோஜ் குமார் பெஹரா, தலைமை கான்ஸ்டபிள் பி.கே சஹூ
**கர்நாடகா**
கான்ஸ்டபிள் ஜிடி குரு,
**மகாராஷ்டிரா**
தலைமை கான்ஸ்டபிள் சஞ்சய் ராஜ்புட், கான்ஸ்டபிள் நிதின் சிவாஜி ரத்தோட்
**மேற்கு வங்கம்**
தலைமை கான்ஸ்டபிள் பப்லு சாத்ரா, கான்ஸ்டபிள் சுதிப் பிஸ்வாஸ்
** மத்தியப் பிரதேசம்**
கான்ஸ்டபிள் அஷ்வினி குமார், உதவி துணை இன்ஸ்பெக்டர் மோகன் லால்
**உத்தரகாண்ட்**
கான்ஸ்டபிள் விரேந்திர சிங்,
**பீகார்**
கான்ஸ்டபிள் ரத்தன் குமார் தாகூர், தலைமை கான்ஸ்டபிள் சஞ்சய் குமார் சின்ஹா
**அசாம்**
தலைமை கான்ஸ்டபிள் மானேஸ்வர் பிசுமத்ரி
*சுப்பிரமணியன் ஜி, 28, கான்ஸ்டபிள், தூத்துக்குடி*
தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்தார்.
காஷ்மீரில் பணியாற்றி வந்த அவருக்கு, திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. பொங்கல் கொண்டாட சொந்த ஊர் வந்த சுப்பிரமணியன், கடந்த 10ஆம் தேதி மீண்டும் காஷ்மீர் புறப்பட்டார். பணியில் சேர்ந்துவிட்டதாக கடந்த 14ஆம் தேதி மனைவி கிருஷ்ணவேணியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருந்த தனது தந்தையிடம், கண்களை பார்த்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். ஆனால் அன்றைய தினமே, தற்கொலை படை தாக்குதலில் சுப்பிரமணியன் இறந்த செய்தி அந்தக் குடும்பத்தினருக்கு பேரிடியாய் விழுந்துள்ளது.
*சிவச்சந்திரன் அரியலூர்*
தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் சிவச்சந்திரன் கர்ப்பமாக உள்ள தனது மனைவி காந்திமதிக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இதனால் அவர் உயிரிழந்ததை முதலில் நம்ப மறுத்த அவரது மனைவி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன், தனது கணவரை நேரில் காண வேண்டும் என்று கதறியது அரியலூர் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிவச்சந்திரனின் வருமானத்தைத் தவிர வேறு வருமானம் அவரது குடும்பத்துக்கு இல்லை என்பதால் காந்திமதிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர். 2010ல் ராணுவத்தில் சேர்ந்த இவர், ஜனவரி 7ஆம் தேதி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து திரும்பியுள்ளார்.
ஹெச்.குரு கான்ஸ்டபிள்-மண்டியா
கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள தனது கிராமத்துக்கு வந்த குரு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று அவரது மனைவி கலாவதிக்கு தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது, ”அவர் என்ன பேசினார் என்று புரியவில்லை. ஆனால் கவனமாக இருங்கள்” என்று அறிவுறுத்தியதாக குருவின் மனைவி கலாவதி தெரிவித்துள்ளார். ராணுவத்தை விட்டு வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்று பல முறை கூறியும் அவர் வரவில்லை இன்னும் சில ஆண்டுகள் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று எங்களது பேச்சை மறுத்துவிடுவார்” எனக் கண்ணீர் மல்க கூறியுள்ளார் கலாவதி. 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், கடன் வாங்கி வீடு கட்டியிருக்கிறார். இப்போது அந்தக் கடன்களை நாங்கள் எப்படி அடைக்கப் போகிறோம் என்று தெரியவில்லை என அவரது தந்தை தோபி வருத்தம் தெரிவித்துள்ளார்.
*வசந்த குமார் – கொச்சி*
உயிர் தியாகம் செய்த கேரளா வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த குமார்(40). 2001ல் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். 18 ஆண்டுகளாக ராணுவத்திற்குச் சேவையாற்றியவர். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உள்ளன. அவர் பற்றி அவரது சகோதரர் சஞ்சீவன் கூறுகையில், 10 நாட்களுக்கு முன்பு தான் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார். நாட்டிற்காக அவர் உயிர்த்தியாகம் செய்ததை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம். ஒருநாள், மூவர்ண கொடி போர்த்தப்பட்ட நிலையில் அவரது உடல் தான் வீட்டிற்கு வரும் என முன்பே நாங்கள் எதிர்பார்த்தது தான் என்றார்.
*நிதின் சிவாஜி ரதோர் – புல்தானா*
வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவரான நிதின் சிவாஜி ரதோர், மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தாக்குதல் நடப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன், தாங்கள் புறப்பட இருந்த பேருந்து அருகே நின்று செஃல்பி எடுத்து, தனது மனைவிக்கு அனுப்பினார் என்று நிதின் நினைவைப் பகிர்ந்த அவரது சகோதரர் பிரவீன் “கோழைத்தனமான செயல்களால் எதிரிகள் நம்மை அழிக்க நினைக்கின்றனர். அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.�,”