|
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றுவருகிறது.
குடிசைப் பகுதி போன்று அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் நயன்தாரா நேற்று படக்குழுவுடன் இணைந்துள்ளார். விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நயன்தாரா தற்போது பட வேலைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். நயன்தாரா தொடர்புடைய காட்சிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக படமாக்கப்படவுள்ளது.
வில்லு படத்திற்குப் பின் நயன்தாரா இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். சிவகாசி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவான முதல் படமான ராஜா ராணியில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.
விஜய்யின் 63ஆவது படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விவேக் பாடல்கள் எழுத, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.
நயன்தாரா தற்போது கொலையுதிர் காலம், ஐரா ஆகிய படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
�,