கனவு மெய்ப்பட…! பகுதி – 11
வெற்றி பெற்றவர்களை உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும். அவர்கள் தங்கள் Comfort Zone விட்டு வெளியே வந்து தங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.
புதிதாகத் திருமணம் ஆன ஒரு பெண் டெல்லிக்குச் செல்கிறார். டிகிரி படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லை. இந்தி சுத்தமாகத் தெரியாது. இந்தி இல்லாமல் டெல்லியில் காலம் தள்ளுவது கடினம்.
அவர் சைகை மொழியை வைத்தே காய்கறிக் கடை, சூப்பர் மார்கெட் போன்ற இடங்களில் எப்படியோ சமாளிக்கிறார். அதுவே பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார். எனவே இந்தி கற்கவோ அல்லது பேசவோ முயற்சிக்கவேயில்லை. அவர் தன் Comfort Zone விட்டு வெளியே வர விரும்பவில்லை. அதற்குக் காரணம் பயம். தயக்கம். கூச்சம். சோம்பேறித்தனம்.
சுற்றுலாத் தலங்களில் படிப்பறிவே இல்லாத ஒரு ஆட்டோ டிரைவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பேசிக் கலக்குவதை நாம் காண முடியும். காரணம் அவர் தன் Comfort Zone விட்டு வெளியே வந்ததுதான். பிழையுடன் பேசினாலும் அது குறித்துக் கவலைப்படாமல் தப்பும் தவறுமாக பேச ஆரம்பித்து நாளடைவில் சுற்றுலா வருபவர்களுடன் பேச அவசியமான அத்தனை வாக்கியங்களையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொள்கிறார்.
முன்னவர் Comfort Zone விட்டு வெளியே வர விரும்பவில்லை. அவசியமும் இல்லை என்ற சூழல். பின்னவர் Comfort Zone விட்டு வெளியே வரவில்லை என்றால் பிழைப்பு நடத்துவதே கடினம்.
ஒரு குழந்தை பிறந்தது முதலே Comfort Zone என்ற வளையத்தை மாட்டிவிடுகிறோம். 2 வயதில் மழலை மாறுவதற்குள் திருக்குறளை ஒப்பிக்க வேண்டும். 5 வயதில் பள்ளிக்குச் செல்லும் முன்னரே ஆங்கிலத்தில் அகிலத்தையே ஆள வேண்டும். பள்ளிப் படிப்பில் எப்பவும் முதல் மதிப்பெண் பெற வேண்டும். படித்து முடித்தவுடன் இன்ஜினியர், டாக்டர் என ஏதேனும் ஒரு ஹைகிளாஸ் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும். கேம்பஸிலேயே தேர்வாகி ஐடி நிறுவனத்துக்குள் சென்றுவிட வேண்டும். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் ஆன்சைட் பிராஜெக்ட்டுக்காக அமெரிக்கா சென்றுவிட வேண்டும். முப்பது வயதுக்குள் சொந்தமாக வீடு, கார் வாங்கிவிட வேண்டும். அதைத் தகுதியாக வைத்துத் திருமணம் குழந்தை என செட்டில் ஆகியிருக்க வேண்டும்.
இதில் எங்கேனும் சறுக்கினால் போச்சு… வாழ்க்கைக்கு ஒத்துவராத ஜீவனாகக் கருதி ஒதுக்கிவிடுவார்கள். ஒதுக்கப்படாமல் இருக்கவே பெரும்பாலானோர் Comfort Zoneஐ விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். அந்த வளையத்துள்ளேயே சாகசம் புரியும் சர்கஸ் சிங்கங்களாய் சுழல்கிறார்கள்.
**முடிவெடுக்கும் உரிமையை தாரை வார்க்காதீர்!**
நான் 1992ஆம் ஆண்டு எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து சென்னை வந்து காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தைத் தொடங்கினேன். இதுவும் ஒரு வகையில் Comfort Zoneஐ விட்டு வெளியே வந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் செயல்பாடுதான்.
சிறு வயதிலிருந்தே ஏராளமான புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்ததால், என் பெயரில் தயாரிப்புகள், படைப்புகள், கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்பது எனது பெருங்கனவானது. அதுவே தொழில் தொடங்குவதற்கும் உந்துதலாக இருந்தது.
அதற்காக என் படிப்பு, உழைப்பு, திறமை இவற்றை மூலதலமாக்கினேன். கூடவே பெற்றோரின் முழு ஆதரவும் இருந்ததால் என் Comfort Zoneஐ விட்டு வெளியே வந்து வாழ்க்கையை எதிர்கொள்வது சுலபமானது.
ஆனால் வெளி உலகில்தான் என் கவனத்தைச் சிதறடிக்க எத்தனை எத்தனை முயற்சிகள்.
*உன் படிப்பை வீணடிக்கிறாய்….*
*பெரிய நிறுவனங்களில் ஐடி துறையில் முயற்சிக்கலாமே…*
*நல்ல சம்பளத்தில் அரசு உத்யோகத்தில் நுழையலாமே…*
*திருமணத்துக்குப் பிறகு பிசினஸ் ஒத்துவராது…*
*அமெரிக்காவில் ‘ஜாம் ஜாம்’என்று செட்டில் ஆவதை விட்டு, சொந்த பிசினஸ் ஆரம்பித்து கஷ்டப்படணுமா…*
இப்படி ஆயிரம் ஆலோசனைகள். அறிவுரைகள்.
கூடவே…
*‘நல்ல மதிப்பெண் வாங்கி இருக்க மாட்டாள்’*
*‘சென்னையில் படிக்கவில்லை…. ஆங்கிலம் தெரியாம இருக்கும்…. அதான் இண்டர்வியூவில் செலெக்ட் ஆக முடியவில்லை…’*
இதையெல்லாம் பொருட்படுத்தாமல், என் Comfort Zoneஐ விட்டு வெளியேறிய இந்த 25 ஆண்டுகளில் எனக்கான பாதையை உருவாக்கி வடிவமைத்து அதில் வெற்றியும் அடைந்துள்ளேன்.
Comfort Zoneஐ விட்டு வெளியேறும் தைரியம் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. தங்கள் முடிவுகளை எடுக்கும் உரிமையை மற்றவர்களிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிடுவதும் ஒரு காரணம்.
**கணிதம் படித்தும் தொழிலதிபர் ஆகலாம்!**
மிக சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற புத்தகத்தைப் படித்தேன்.
SSN என்று மூன்றெழுத்துக்களில் அனைவராலும் அறியப்படும் திரு. எஸ். சங்கரநாராயணனின் (1912-1987) சுயசரிதை இது. ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் ரமணன்.
எளிய குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் கணிதம் படித்து கிடைத்த ஆசிரியர் வேலையை ஒதுக்கிவிட்டுத் தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டு, அதில் மிக உறுதியாக நின்று தொடர்ந்து பல்வேறு தொழில்களைத் துவங்கி உயரங்களையும் துயரங்களையும் சந்தித்த ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணக் கதைதான் இந்தப் புத்தகம்.
தோல் பொருட்களை விற்பனை செய்வதில் தொடங்கிய SSN, வாழ்க்கையில் Master Cutter, Army Clothing Supplier, Civil Engineering Contractor, Master Printer, Steel Drum Manufacturer, விவசாயி என்று பல துறைகளில் உச்சம் தொட்டவர்.
இறுதியில் தன் மகன் சீதாராமனுடன் இணைந்து Super Auto forge Private Limited (SAF) என்ற நிறுவனத்தைத் துவக்கி, Cold Forging Technology தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி மிகப் பெரிய தொழிலதிபராக அவதாரம் எடுத்தார். இன்று இந்த நிறுவனத்தின் மொத்த வியாபாரம் பல கோடிகள்.
1928இல் கணிதத்தை மேஜராக எடுத்து கல்லூரியில் காலடி எடுத்து வைத்த SSN, இசை, ஆங்கில இலக்கியம், ஸ்போர்ட்ஸ் மற்றும் நாடகக் கலை இவற்றிலும் ஆர்வமாக இருந்தார். டென்னிஸ், வாலிபால் என அனைத்திலும் ஈடுபாடு காட்டினார். தினமும் உடற்பயிற்சி செய்தார்.
கல்லூரி முடிந்ததும் மாதம் 30 ரூபாய்க்கு ஆசிரியர் பணி கிடைத்தது. ஆனால், மனம் முழுவதும் பிசினஸ் ஆர்வமே.
காரணம் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அவருக்கு ஏற்பட்ட 2 அனுபவங்கள்.
முதலாவதாக, பள்ளியில் மாணவர்களின் பிராஜெக்ட் ஒன்றுக்குத் தனிப் படங்கள் தேவையாக இருந்தன. ஆனால் மார்க்கெட்டில் நிறைய படங்கள் அடங்கிய சார்ட்தான் கிடைத்தது. SSN அதை வாங்கிவந்து மாணவர்களுக்குத் தேவையான படங்களை மட்டும் கட் செய்து விற்றுப் பணம் சம்பாதித்தார்.
இரண்டாவதாக, தஞ்சாவூரில் படித்து வந்தபோது ஒரு சில்க் வியாபாரி, மிகப் பெரிய அளவில் செலவு செய்து தன் மகளுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்தார். ஐந்து நாட்கள் முன்னணி கலைஞர்களை ஏற்பாடு செய்து இசை நிகழ்ச்சியுடன் கூடிய கலகலப்பான திருமணம்.
SSN அந்த வியாபாரிக்கு, ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் வைத்தால் இசை நிகழ்ச்சிகள் இன்னும் அருமையாக இருக்கும் என யோசனை சொல்ல அதை அவரும் ஏற்க சென்னையில் இருந்து அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார் SSN.
இந்த ஏற்பாட்டுக்காக சென்னையில் இருந்து வரவழைத்த எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டரிடமிருந்து 100 ரூபாய் கமிஷன் கிடைத்தது. இதுபோன்ற சின்னச் சின்ன அனுபவங்கள் SSN மனதில் பிசினஸ் ஆர்வத்தை வளர்த்தன. இயல்பிலேயே புத்திசாலியாக இருந்த SSN தன் சிறு வயதிலேயே ஏராளமான வெவ்வேறு துறைசார்ந்த நூல்களைப் படித்துத் தன் அறிவை வளர்த்துக்கொண்டார்.
பல்துறை ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே வாழ்க்கையில் தன் Comfort Zoneஐத் தாண்டியும் வேலை செய்ய முடியும். ரிஸ்க் எடுத்துச் செயல்பட முடியும். வெற்றி தோல்வி எதுவந்தாலும் கவலைப்படாமல் அடுத்தடுத்து நகர்ந்துகொண்டே இருக்க முடியும். இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் SSN.
ஒவ்வொருவருக்கும் அவரவரது Comfort Zoneஐ விட்டு வெளியே வந்து செயல்பட ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அது சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். ஏன் அது உப்புச் சப்பில்லாத விஷயமாகக்கூட இருக்கலாம். ஆனால், நிச்சயம் ஒரு தாக்கம் இல்லாமல் Comfort Zoneஐ விட்டு வெளியே வர இயலாது.
Comfort Zone வளையத்துக்குள்ளேயே இருப்பதற்கும் காரணங்கள் உண்டு. அவை பெரும்பாலும் பயம், தயக்கம், கூச்சம், சோம்பேறித்தனம் எனப் பொதுவானதாகவே இருக்கும்.
யோசிப்போம்!
(அடுத்த கட்டுரை அடுத்த சனியன்று…)
*(கட்டுரையாளர் : **காம்கேர் கே.புவனேஸ்வரி** – காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐ.டி. நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MDஆகக் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறார். தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகங்கள் சார்ந்த கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: compcare@hotmail.com)*
**முந்தைய பகுதிகள் :**
**பகுதி – 1 : [நிம்மதியாக வாழ்கிறோமா?](https://minnambalam.com/k/2018/11/09/22)**
**பகுதி – 2 : [பெண்களின் உடன்பிறந்த ‘கவச குண்டலம்’!](https://minnambalam.com/k/2018/11/16/15)**
**பகுதி – 3 : [தடை உடைப்போம்… இலக்கை அடைவோம்…](https://minnambalam.com/k/2018/11/23/27)**
**பகுதி – 4 : [நம் பலம் நம் கையில்தான்!](https://minnambalam.com/k/2018/11/30/13)**
**பகுதி – 5 : [தினம் ஒரு கிழங்கு!](https://minnambalam.com/k/2018/12/07/4)**
**பகுதி – 6 : [நம் செயலே நம் அடையாளம்!](https://minnambalam.com/k/2018/12/14/8)**
**பகுதி – 7 : [பணம், பதவி, புகழ்!](https://minnambalam.com/k/2018/12/21/5)**
**பகுதி – 8 : [வேண்டாமே ‘ஈ அடிச்சான் காப்பி!’](https://minnambalam.com/k/2018/12/28/14)**
**பகுதி – 9 : [பழக்கம்: பிடிவாதமும் நெகிழ்வும்!](https://minnambalam.com/k/2019/01/04/22)**
**பகுதி – 10 : [அந்தப் பத்தாவது ஆப்பிள்!](https://minnambalam.com/k/2019/01/12/11)**�,”