~வருமான வரித் துறைக்கு உச்ச நீதிமன்றம் அபராதம்!

Published On:

| By Balaji

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாகத் தவறான தகவலை அளித்த வருமான வரித் துறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

உத்தரப் பிரதேச நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் (ஹெச்பிடிஏ) என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வருமான வரிச் சட்டத்தில் விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை வருமான வரித் துறை கடந்த 2006ஆம் ஆண்டு நிராகரித்தது. இதையடுத்து ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் வருமான வரித் துறை தீர்ப்பாயத்தை நாடி வரி விலக்கு பெற்றது.

இதை எதிர்த்து வருமான வரித் துறை தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றம் கேள்வி

வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, வருமான வரித் துறை சார்பில் ஆவணங்களையும் விளக்கங்களையும் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. தாக்கல் செய்த ஆவணங்களிலும் தவறான விவரங்கள் கூறப்பட்டு இருந்தன. இதையடுத்து, மேல்முறையீட்டுக்கு 596 நாட்கள் தாமதமானது ஏன் என நீதிமன்றம் விளக்கம் கேட்டது. இதற்கு, வருமான வரித் துறை தரப்பில் போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், வருமான வரித் துறை மற்றும் மத்திய அரசின் வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.

கண்டனம்

உங்களுக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் போதவில்லையா அல்லது விளக்கம் கொடுக்க முடியவில்லையா என்று கேள்வி எழுப்பியது. வருமான வரித் துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், “தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள். உச்ச நீதிமன்றம் ஒன்றும் ‘பொழுதுபோக்கு தளமல்ல’. இந்திய உச்ச நீதிமன்றத்தை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.

10 லட்சம் அபராதம்

“மனுதாரர்கள் (வருமான வரித் துறை) முற்றிலும் தவறான தகவல்களை நீதிமன்றத்துக்கு வழங்கி இருக்கின்றனர். வருமான வரித் துறை ஆணையர் வழியாக மத்திய அரசு இந்தப் பிரச்சினையை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறிய உச்ச நீதிமன்றம், வருமான வரித் துறையின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. தாமதத்துக்கான காரணம் குறித்து நீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, தொகையை நான்கு வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவைக் குழுவிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share