பெரம்பலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றில் வயலில் தூக்கி வீசப்பட்ட இரும்பு மேற்கூரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் கொட்டரை, குரும்பபாளையம், மருவத்தூர், பேரளி ஆகிய பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
அதேபோல் பெரம்பலூர் – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி அருகே உள்ள செயல்படாத சுங்கச்சாவடியின் பல டன் எடை கொண்ட மேற்கூரை சுமார் 1500 அடி தூரம் காற்றில் தூக்கி வீசப்பட்டது. தூக்கி வீசப்பட்ட மேற்கூரை கம்பு பயிரிட்ட வயலில் விழுந்தது.
இதையறிந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றனர். ஆனால், இதுவரை வயலில் இருக்கும் இரும்பு மேற்கூரையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்வரவில்லை. இதனால் அரை ஏக்கரில் பயிரிடப்பட்ட கம்பு சேதமடைந்துள்ளது. இதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உடனடியாக சுங்கச்சாவடி மேற்கூரையை அகற்ற வேண்டும் எனவும் மீண்டும் அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
**-ராஜ்**
.