தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.7,825 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் மனு அளித்துள்ளார்.
சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா, மாணவர்கள் கலந்துரையாடும் ஹேக்கத்தான் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 30) சென்னை வந்தார். அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு பிற்பகல் தனி விமானத்தில் டெல்லி சென்ற பிரதமரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
அப்போது, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதிகளை விடுவிப்பது, வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பிரதமரிடம் முதல்வர் வழங்கினார்.
அதில், “தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை கொண்ட மாநிலம். தமிழகத்தின் வளர்ந்து வரும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கோதாவரி – காவிரி நதிகளை இணைப்பது அவசியம். இதனால் தமிழ்நாட்டின் நீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மேலும், புனித நதி காவிரி மற்றும் அதன் முக்கிய துணை நதிகளை மீட்டெடுப்பதற்கான “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்துக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. காவிரி நதி புத்துயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை ரூ.9,927 கோடி எனத் தோராயமாகத் தமிழகம் தயாரித்துள்ளது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள முதல்வர், “மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவிகிதச் செலவில் கூட்டாகச் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். உதான் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் சென்னை இடையே மாலை நேர விமானச் சேவையை இயக்க அறிவுறுத்த வேண்டும். கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “30.9.2019 தேதியின்படி முக்கியத் திட்டங்களுக்கு இந்திய அரசிடமிருந்து மானிய உதவி நிலுவையில் உள்ளது. ரூ.7,825.59 கோடிக்கு மானிய உதவிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு இன்னும் தரவில்லை. தமிழகத்துக்கான நிதியை விரைவாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்றும் பிரதமரிடம் அளித்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளார்.�,