நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். ஆனால், இதுவரை கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற விவாதமும் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. வருவார் என்று ஒரு தரப்பும், வரமாட்டார் என மற்றொரு தரப்பும் பந்தயம் கட்டிவருகிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற தகவல்தான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், தற்போது அதனை மாற்றி ரஜினி அரசியலுக்கு வருவார் என்று ஸ்டாலினிடம் கூறியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து ஸ்டாலின் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ரஜினி தேர்தலில் போட்டியிட்டால் யாருடைய வாக்குகள் பிரியும் என்பதுதான் அதில் முதன்மையாக இருந்தது. ரஜினியால் திமுக ஆதரவு வாக்குகள் பிரியக்கூடாது என பேசி அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விஜய் திமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தால் அது முடியும் என்ற முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக விஜய் தரப்பிடம் ஸ்டாலின் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கு விஜய் தரப்பிலிருந்தோ, ‘ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் இருந்தாலும் விஜய் படங்கள்தான் அதிக கலெக்ஷன் செய்கிறது. தமிழகத்திற்கு தற்போது விஜய்தான் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் திரைத் துறையிலிருந்து விலகி அரசியல் பக்கம் சென்றுவிட்டால் அந்த இடத்திற்கு தானாகவே விஜய் வந்துவிடுவார்.
அதுபோல விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும் அரசியலுக்கு வருவதற்குள் குறைந்தபட்சம் 75 திரைப்படங்களாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். மாஸ்டர் அவருக்கு 64ஆவது திரைப்படம். ஆகவே, இன்னும் 10 திரைப்படங்கள் எடுத்த பிறகு அரசியலுக்கு வந்தால்தான் நன்றாக இருக்கும் என்கிறார்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
இருப்பினும் விஜய்யை வாய்ஸ் கொடுக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
�,