யானை வழித்தடங்களில் அமைந்திருக்கும் விடுதிகள், கட்டடங்களை உடனடியாக அகற்றுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மலைப்பிரதேசங்களில் உள்ள யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையை நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு
விசாரித்துவருகிறது. ஏற்கனவே, மாநில அரசுகள் யானைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணை இன்று(ஜூலை 12) நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன்பு நடந்தது.
யானைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் 2015-16 ஆம் ஆண்டில் 61 ஆக இருந்த யானைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டில் 125 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் யானைகள் இறப்பு அதிகம் ஏற்படுவதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 18 ஆயிரம் யானைகள் இடம் பெயர்கின்றன. யானைகள் செல்லும் வழியில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டும், யானை வழித்தடத்தில் கட்டுமானத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் 400 தனியார் விடுதிகளை அகற்றவும், யானைகளின் வழித்தடங்களில் புதிய தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
�,