ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட மோட்டார் வாகனச் சட்டங்களைப் பின்பற்றுவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதம் விதிக்கும் அதிகாரத்தை அனைத்துப் பிரிவு சார்பு ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
மோட்டார் வாகன விதிமீறல்களைத் தடுப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார். “மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இந்த சட்ட விதிகளை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஜூன் 12) நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மோட்டார் வாகன சட்ட விதிமீறல் குறித்துப் புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலி மூலமாக இதுவரை 96 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“சாலை பாதுகாப்புக்காக 2000ஆவது ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ரூ.605.55 கோடி தமிழக அரசினால் செலவிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கியவர்கள் மீது 14 லட்சத்து 6 ஆயிரத்து 491 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீட் பெல்ட் அணியாததற்காக 39 லட்சத்து 2 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது உடனடி அபராதம் வசூலிக்க எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், “மோட்டார் வாகன விதிமீறல் தொடர்பான குற்றத்துக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த 2011ஆம் ஆண்டே போக்குவரத்து ஆணையர் அரசாணை பிறப்பித்துள்ளார். எனவே, ஹெல்மெட் அணியாதவர்கள், மோட்டார் வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரம் தற்போது போக்குவரத்து சார்பு ஆய்வாளர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும், இந்த அதிகாரத்தை சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்துப் பிரிவு சார்பு ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 21ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
**வாகனத்துடன் 2 ஹெல்மெட்**
இருசக்கர வாகனங்களை விற்கும்போது அதன் உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் 2 ஹெல்மெட்களை இலவசமாக வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளார் போக்குவரத்து துறை ஆணையர் சி.சமயமூர்த்தி. மோட்டார் வாகன உற்பத்தியாளர்களோடு ஆலோசனை செய்தபின்னரே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் ரூ.3,500 வரை செலவிட வேண்டியதிருக்கும்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**
�,”