தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராவது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு நிதியுதவி செய்ததாக, வழக்கறிஞர் முருகன் என்பவர் மீது, தர்மபுரி கியூ பிராஞ்ச் பிரிவினர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, முருகன் தாக்கல் செய்த மனுவை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் சீராய்வு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் அமர்வு முன்பு, இன்று (நவம்பர் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் முருகனின் பெயர் இல்லாத நிலையில், தற்போது உள்நோக்கத்துடன் அவரது பெயரைச் சேர்த்துள்ளதாகவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு ஆதரவாக முருகன் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தடுக்கவே, காவல் துறையினர் இந்தப் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த கியூ பிராஞ்ச் தரப்பு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் முருகனும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சீனிவாசனும் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தது. கைது செய்யப்பட்ட சீனிவாசன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, முருகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.வி.முரளிதரன், மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்காக நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராவது குற்றமல்ல என்று தெரிவித்தார். முருகன் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு நிதியுதவி செய்துள்ளார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறினார். அவரை விடுவிக்க மறுத்து தர்மபுரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி.�,