தந்தை கடனை திருப்பிச் செலுத்தாததால் மகளுக்குக் கல்விக் கடன் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்கப் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா, கல்விக் கடன் வழங்கப் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மாணவியின் தந்தை ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் மாணவிக்கு கல்விக் கடன் வழங்க மறுத்துப் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவி தீபிகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனது தந்தைக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லாத நிலையில் வங்கி நிர்வாகத்தின் தவறான பதிலை ஏற்றுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், தவறான தகவல் அளித்து தன்னுடைய தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்கப் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபிகாவின் தந்தை வங்கிக் கடன் பெற்றதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை ஜூலை 16ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.�,