மாட்டு இறைச்சி மீதான தடையை ரத்து செய்யக்கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தக்கலை அண்ணா சிலை முன்பு நேற்று ஜூன் 10ஆம் தேதி மாட்டு இறைச்சி மீதான தடையை ரத்து செய்யக்கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது:
“மாட்டு இறைச்சி மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஆளும்கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. குமரி முதல் இமயம் வரை பாஜக வகுப்புவாதத்தை எதிர்க்க பல்வேறு அமைப்புகளும் அணி திரண்டுள்ளன. பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் பாஜக சாதனைகள் என்று எதுவுமே இல்லை. மக்களைத் திசை திருப்புவதற்காகவே திட்டமிட்டு மாட்டு இறைச்சி மீதான தடையை பாஜக-வினர் கொண்டுவந்துள்ளனர். தமிழகத்தில் ஒருபோதும் பாஜக கால் ஊன்ற முடியாது.
விலங்குகளைச் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவரக் கூடாது, வாங்கக் கூடாது என்ற அறிவிப்பால் விவசாயிகள் மட்டுமன்றி இறைச்சி கடை வைத்திருப்பவர்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மாட்டு இறைச்சிக்குத் தடை என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; அது விவசாயிகளுக்கும், கிராமப்புற பொருளாதாரத்துக்கும் எதிரானது. இறைச்சி சாப்பிடுவது என்பது தனிநபர் உரிமை. இதில், தலையிட மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
விலங்குகள் வதை தடைச்சட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. கால்நடை பாதுகாப்பு என்ற பெயரில் மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டிக்க வேண்டாமா?” என்று அவர் கூறினார்.�,