{பேரம்: ஸ்டாலினுக்கு ரூட் கொடுக்கும் அமைச்சர்!

Published On:

| By Balaji

“அமைச்சர்கள் யாரேனும் பேருந்து வழித்தடங்கள் வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால், ஸ்டாலின் நீதிமன்றம் செல்லட்டும்” என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் நேற்று திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி பணம் கொடுப்பதற்காக, அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்துள்ளது என்றும் அதன் மூலமாக தனியார் பஸ் முதலாளிகளிடம் பேரம் பேசப்பட்டு, பெரிய தொகைகள் வாங்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறினார்.

மேலும், முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் புதிது புதிதாக பஸ் ரூட்டுகள் வாங்கி இருப்பதாகவும் சில செய்திகள் வந்திருக்கின்றன” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 30) சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு நினைவஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுக செயல் தலைவர் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டைக் கூறிவருகிறார். அப்படி ஆதாரம் இருந்தால் அவர் நீதிமன்றத்திற்குச் செல்லட்டும், அதை நாங்கள் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “திமுக ஆட்சிக் காலத்தில் திரைப்படத் துறை அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அனைவரும் சுதந்திரமாகத் தொழில் செய்யும் அளவிற்கு இருப்பதை இந்த ஆட்சியின் பெருமையாகக் கருதுகிறேன்” என்றும் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “ஓகி புயலின்போது கடலுக்குள் மீன் பிடிக்க சென்றவர்களில் 33 படகுகளில் சென்ற 200 மீனவர்கள் தற்போது வரை கரைக்குத் திரும்பவில்லை. மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக அரசு விசைப்படகு மூலம் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel