பச்சிளங்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவை வெறும் மருத்துவக் கழிவுகள் மட்டுமே என்று காவல் துறை தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான ஹரிதேவ்பூரில் 14 பச்சிளங்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து நேற்று (செப்டம்பர் 2) கைப்பற்றப்பட்டன.
ஹரிதேவ்பூர் பகுதியில் ராஜா ராம்மோகன் ராய் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றபோது, குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஹரிதேவ்பூர் காவல் நிலைய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளின் சடலம் முற்றிலும் அழுகிய நிலையிலும், சில குழந்தைகளின் உடல்கள் பாதி அழுகிய நிலையிலும் உள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி மற்றும் மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் விரைந்து சென்று அப்பகுதியைப் பார்வையிட்டனர். இதன் பிறகு, ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் மேற்கு வங்க காவல் துறையின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, 14 பிளாஸ்டிக் பைகளில் கைப்பற்றப்பட்டது பச்சிளங்குழந்தைகள் அல்ல என்றும், அவை மருத்துவக் கழிவுகள் மட்டுமே என்றும் போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. மருத்துவச் சோதனைக்குப் பின்னர் இந்த உண்மை தெரிய வந்ததாகக் கூறப்பட்டது.�,