�
திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் பரிந்துரைப்படி, பஞ்சாயத்து செயலாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நுணாகாடு, மருதவனம், எடையூர் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களின் செயலாளர்களாக தினேஷ், அவினாஷ், ஜெயஸ்ரீ ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தமிழக உணவு அமைச்சர் காமராஜ் பரிந்துரைப்படி இவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறி கோமதி உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன் இன்று (நவம்பர் 16) விசாரணைக்கு வந்தது. பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தியோ அல்லது பதவி உயர்வு மற்றும் பணிமாற்ற அடிப்படையில் தான் நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும்… அமைச்சர் பரிந்துரைப்படி நியமனங்கள் மேற்கொள்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உத்தரவிட்டுள்ளார்.�,