நேற்று தேர்தல் அறிவிப்பு: இன்று திருவாரூரில் பணம் கைப்பற்றல்!

Published On:

| By Balaji

மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியான நிலையில், இன்று திருவாரூர் சோதனைச் சாவடியொன்றில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இதோடு சேர்த்து நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, உடனடியாகச் சோதனைச் சாவடிகளில் பலத்த சோதனை நடத்தத் தொடங்கினர் காவல் துறையினர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் கானூர் சோதனைச் சாவடியில் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர் அதிகாரிகள். அப்போது ஒரு காரில் 50 லட்சம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக நேரில் விசாரணை நடத்தினர் திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை மற்றும் திருவாரூர் தொகுதி தேர்தல் அதிகாரி முருகதாஸ். அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அது கருவூலத் துறையில் ஒப்படைக்கப்பட்டது. பணத்தைக் கொண்டுவந்த சாகுல் ஹமீது என்பவர், லாரியின் மேற்பகுதி கட்டும் பணிக்காக இந்தப் பணத்தை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டால் அந்த பணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share