nஇந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்கள் வாயிலான வருவாய் இந்த ஆண்டின் முடிவுக்குள் 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
தொலைத்தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்த பிறகிலிருந்தே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜியோவுக்குப் போட்டியாக இதர நெட்வொர்க் நிறுவனங்களும் குறைந்த கட்டணத்தில் சலுகை வழங்கி வருவதால் இழப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நெட்வொர்க் நிறுவனங்களால் போதிய வருவாய் ஈட்ட முடியவில்லை. இதுபோன்ற சூழலில் இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நெட்வொர்க் நிறுவனங்களின் சந்தாதாரர்கள் வாயிலான வருவாய் 30 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என்று *கவுன்ட்டர் பாயிண்ட்* நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், நெட்வொர்க் நிறுவனங்களின் சந்தாதாரர் வாயிலான தனிநபர் வருவாய் ரூ.88 முதல் ரூ.100 வரையில் இருக்கிறது. அது டிசம்பர் மாத வாக்கில் ரூ.100 ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்பு இன்கமிங் அழைப்புகள் வாழ்நாள் முழுவதும் இலவசம் என்று இருந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட கால அளவுக்குப் பிறகு ரீசார்ஜ் செய்தால்தான் இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது திட்டங்களை மாற்றியமைத்துள்ளன. இதனால் அவற்றின் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஏர்டெல், வோடஃபோன் – ஐடியா நிறுவனங்கள் ரோமிங் கட்டணங்களையும் உயர்த்தியுள்ளன.�,