உயர்நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தேனி மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதலளிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 12) வெளியிட்ட அறிக்கையில், “தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கும், குறிப்பாக தேனிப் பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியளிக்கிறது. உயர்நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு தன்னிச்சையாக இது போன்ற முடிவினை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன் மிக மோசமான கதிரியக்க ஆபத்துகளையும் விளைவிக்கும் என்று தேனி மாவட்ட மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இத்திட்டம் பற்றி தேனி மாவட்ட மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், மக்களின் எதிர்ப்பினை கவனத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக அரசு அமைந்தவுடன் இந்த நியூட்ரினோ திட்டத்திற்கு 25 ஹெக்டர் நிலத்தினை 3.10.2011 அன்று வழங்கியது. பிறகு வனப்பகுதியில் உள்ள நிலங்கள் 4.62 ஹெக்டேரை அதிமுக ஆட்சி 14.11.2011இல் வழங்கியது. இந்த நிலையில் தொடர்ந்து நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்திலும் போடப்பட்டு நிலுவையில் உள்ளன. ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து, திட்டத்தை எதிர்த்து நடைபயணமும் மேற்கொண்டார். அவர் நடத்திய நியூட்ரினோ எதிர்ப்புப் பேரணியை நானே மதுரை சென்று தொடங்கி வைத்திருக்கிறேன்.
*பூவுலகின் நண்பர்கள்* அமைப்பு பல்வேறு கட்டங்களாக வழக்குத் தொடுத்து இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி மத்திய பாஜக அரசு இந்தத் திட்டத்தை ‘சிறப்புத் திட்டமாகவும்’ ‘பி’ திட்டமாகவும் அறிவித்து, இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. முல்லைப் பெரியாறு, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றிற்கு அருகே நியூட்ரினோ திட்டத்தை அனுமதித்து சுற்றுப்புறச்சூழல், வன விலங்குகள், வனப் பகுதிகளுக்கும், தேனி வாழ் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தற்போதுள்ள அதிமுக அரசு, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும், நகர்ப்புறத்துறை நியூட்ரினோ கட்டுமானத்திற்கான அனுமதியையும் வழங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பாஜக அரசு கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் திரு பழனிசாமியும், தேனித் தொகுதியிலிருந்து துணை முதலமைச்சராகியுள்ள திரு ஓ.பன்னீர்செல்வமும் இந்தத் திட்டத்திற்கு எதிராக உரிய அழுத்தம் கொடுத்து மத்திய அரசை இத்திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் தேனி மாவட்ட மக்களுடைய கொதிப்பையும், எதிர்க்குரலையும் சந்திக்க வேண்டிய நெருக்கடி அதிமுக அரசுக்கு ஏற்படும் என்பதை இப்போதே எச்சரிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**
**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**
**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**
�,”