நடத்துநர் இல்லாமல் அரசுப் பேருந்துகள் இயக்குவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவில், தமிழக போக்குவரத்துத் துறைச் செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பல பேருந்துகள், நடத்துநர் இல்லாமல், ஓட்டுநர் மூலம் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பேருந்துகளில் கண்டிப்பாக நடத்துநர் இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது. நடத்துநர் இல்லாமல் பேருந்துகளை இயக்குவதால் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்குவது சட்டத்துக்கு எதிரானது என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 12) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன்,முன்பு வந்தது. அப்போது, மாநகரம் மற்றும் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் நடத்துநர் இல்லாமல் இயக்கப்படுகின்றனவா என்பது குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
�,