நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் சூசகம்!

Published On:

| By Balaji

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதுவரை தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மட்டுமே தேர்தல் ஆணையர் பழனிசாமி தொடர்ந்து தெரிவித்துவந்தார்.

இதையடுத்து, 15 நாட்களுக்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், துரைசாமி அமர்வு முன்பு நேற்று (ஜனவரி 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடத்துவது தொடர்பாகப் பதிலளிக்க நான்கு வாரக் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பிலோ, “நான்கு வருடங்களாகத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து அவகாசம் கோருவதை ஏற்க முடியாது. எனவே கால அவகாசம் வழங்கக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுப் பதிலளிக்க மூன்று வாரக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share