தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களுக்கு, திமுக எம்.பி.யும் தூத்துக்குடி வேட்பாளருமான கனிமொழி அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான தமிழிசையும், அமமுக சார்பில் புவனேஸ்வரனும் களம் காண்கின்றனர்.
இதில் கனிமொழிக்கும், தமிழிசைக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி, ”கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. தொழில் வளர்ச்சி இல்லை. வேலைவாய்ப்பு இல்லை என்பதைக் கண் கூடாகப் பார்க்க முடிகிறது. அதனால் இந்த பகுதிகளுக்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு, வளர்ச்சியைக் கொண்டு வருவேன். ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்கச்செய்வேன்” என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதுபோன்ற அனல் பறக்கும் பிரச்சாரத்திலும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடத்திருக்கிறது. தனது பிரச்சார வேனுக்கு பின்னால் ஹெல்மெட் அணியாமல் கட்சிக் கொடிகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை கனிமொழி கவனித்து வந்துள்ளார். பின்னர் வேனில் இருந்து கீழே இறங்கி இளைஞர்களை நோக்கி சென்ற அவர், `ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டி ஓட்ட மாட்டீங்களா. அடுத்த தடவை ஹெல்மெட் இல்லாம பார்த்தேன் அவ்வளவுதான். நாளையில் இருந்து எல்லோரும் ஹெல்மெட் போட்டுதான் வரணும், புரியுதா’ என அன்புடன் கண்டித்துள்ளார். அவரது அறிவுரையை கேட்டு இளைஞர்கள் இனி ஹெல்மெட் அணிவதாக உறுதியளித்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் [வைரலாகி](https://twitter.com/i/status/1115242801569181697) வருகிறது.
�,”