அனுமதியை மீறிக் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 30) உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் வார நாட்களில் நான்கு காட்சிகளும், விடுமுறை நாட்களில் ஐந்து காட்சிகளும் திரைப்படங்களைத் திரையிடத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணிக்குத் தொடங்கி ஆறு காட்சிகள் முதல் ஏழு காட்சிகள் வரை திரைப்படங்களைத் திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, ஒளிப்பதிவு சட்டத்தை மீறிக் கூடுதல் காட்சிகள் திரையிடும் திரையரங்குகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர். பண்டிகை, வார இறுதி நாட்களில் கலெக்டரின் அனுமதியுடன் திரையிடலாம். மேலும் வரி ஏய்ப்பு செய்திருந்தால் அந்தத் திரையரங்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் தீபாவளிக்கு ஆறு காட்சிகள், ஏழு காட்சிகள் திரையிட்டு வசூலை அள்ள நினைத்த படங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.�,