திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்சிகளும், விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணிக்கே ஆரம்பித்து 6 காட்சிகள் வரை திரைப்படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், நீதிபதி ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 6 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.�,