திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர வாகனங்களுக்கு முற்றிலும் தடை

Published On:

| By admin

தென்னிந்தியாவின் மிகவும் செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தின் மத்தியில் திம்பம், ஆசனூர், காரப்பள்ளம் வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் தமிழ்நாடு – கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இந்த மலைப்பாதையில் யானைகள் புலிகள், சிறுத்தை, காட்டெருமை, அரிய வகை புள்ளிமான்கள், கழுதைப்புலி உள்ளிட்ட விலங்குகள் நீர் உணவு தேடி சாலையைக் கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

இதை தடுக்க திம்பம் மலைப்பாதையில் கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியிலும் காரப்பள்ளம் சோதனை சாவடியிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஐகோர்ட்டில் தாளவாடி விவசாய சங்க தலைவர் கண்ணையன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் நேற்று தீர்ப்பளித்தார். இதில் 12 சக்கர வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதே போல் 16.5 டன் எடை குறைவான வாகனம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து காரப்பள்ளம் சோதனை சாவடியில் இன்று காலை அவ்வழியாக வந்த கனரக வாகனத்தை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. அப்போது வாகன ஓட்டிகள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மதியம் 12 மணியளவில் போக்குவரத்து சீரானது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share