வேலுமணியை விமர்சித்ததற்காக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூா் ஒன்றியத்திலுள்ள அரசூா் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் அரசூா் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவது, திடக்கழிவுகளைக் கையாள்வது போன்ற பிரச்சினைகள் தொடா்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பிரச்சினையின்போது திமுக நிர்வாகியும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான முத்துராமலிங்கம், அமைச்சர் வேலுமணி குறித்து தரக்குறைவாகப் பேசியதாக அரசூா் அதிமுக செயலாளா் சிவசாமி சூலூா் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். பின்னர், சூலூர் குற்றவியல் நீதிபதி வேடியப்பன் முன்பு ஆஜர்ப்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று (ஜனவரி 27) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “கிராமசபை என்பது மக்களின் சுதந்திரமான கருத்துகளைப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான கருத்துக் கேட்கும் கூட்டம். அதில், ஒரு முன்னாள் கவுன்சிலர் என்ற முறையில் உரிமையுடன் ஒரு கருத்தைக் கூறும்போது, அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அதன் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வு காண்பதுதான் உள்ளாட்சித் துறை அமைச்சரின் பணி” என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் தலையில் அதிகாரம் என்ற ஆணவம் ஏறிக் கூடு கட்டிக்கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவி விடுவது மிகவும் வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ள ஸ்டாலின், “உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு எதிராக, ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால் பத்திரிகையாளரை கைது செய்வது, வழக்கு போட்டால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் திமுகவினரைச் சிறை பிடிப்பது என அட்டூழியத்திலும் அராஜகமான நடவடிக்கைகளிலும் சில காவல் துறை அதிகாரிகள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, கோவைப் பகுதியில் உள்ள காவல் துறையினர், உள்ளாட்சித் துறை அமைச்சரின் தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் போல் செயல்படுகிறார்கள். போலீஸ் துறையின் அறிவிக்கப்படாத துறை அமைச்சராக, தன் கட்டளை கேட்டு நடப்பவர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்டத்துக்கு மாறுதல் அனுமதி கொடுப்பவராக வேலுமணி செயல்படுகிறாரா என்ற சந்தேகம் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும், கோவை மக்களுக்கும் எழுந்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதவிக்கு எஞ்சியிருக்கும் காலம் இன்னும் பதினெட்டு மாதங்கள்தாம். அதன் பிறகு வேலுமணிக்காக பொய் வழக்கு போடும் காவல் துறை அதிகாரிகளும் அவருடைய தூண்டுதலின் பேரில் வரும் புகார்கள் மீது எல்லாம் திமுகவினரை கைது செய்து துன்புறுத்தும் காவல் துறை அதிகாரிகளும், நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்றும், “உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால் நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றும் எச்சரித்துள்ளார் ஸ்டாலின்.�,