திடீர் பணப்புழக்கம்: வருமான வரித் துறை வேண்டுகோள்!

Published On:

| By Balaji

பெரிய அளவிலான ரொக்கம் பதுக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது இடமாற்றம் செய்யப்படுவதாகவோ தெரிய வந்தால், அதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வருமான வரித் துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், திடீர் பணப்புழக்கம் மற்றும் கணக்கில் வராத பணம் குறித்து மக்கள் தகவல் கொடுக்க வேண்டும். பெரியளவில் ரொக்கம் பதுக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது இடமாற்றம் செய்யப்படுவதாகவோ தெரியவந்தால் அதுகுறித்து மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை மதிப்புமிக்க பொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தாலும் தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

கறுப்பு பணப் புழக்கத்தைக் கண்காணிக்க வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு சார்பில் 24 மணிநேர செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை, நேற்று (மார்ச் 14) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு தென்மண்டல இயக்குநர் முரளிகுமார் தலைமையில் இயங்கும்.

அதிகளவிலான பணப் பரிமாற்றம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 6669 என்ற இலவச தொலைபேசி எண் மூலமும், 9445467707 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 044- 28262357 என்ற தொலைநகல் மூலமும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share