அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று அதிமுக-தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அக்கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸிலிருந்து பிரிந்து கட்சி ஆரம்பித்த வாசன், நேரெதிர் கொள்கையுடைய பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது விமர்சனத்தை உண்டாக்கியது.
இந்த நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 14) செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு தஞ்சாவூர் தொகுதியை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியிருக்கிறார்கள். நாங்கள் கேட்ட தொகுதியே எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தேர்தல் கூட்டணி வேறு, கட்சியின் இலட்சியம் என்பது வேறு என்று விளக்கிய வாசன், “எண்ணிக்கை அடிப்படையில் என்பதை விட நல்ல எண்ணங்கள் அடிப்படையில் நாட்டு மக்களுக்காக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளோம். பாராளுமன்றத் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல் வரை எங்கள் கூட்டணி அமோக வெற்றிபெறும்” என்று கூறினார்.
**எந்த சின்னத்தில் போட்டி?**
சின்னம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன், “இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவில்லை. சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டால் அதில் போட்டியிடுவோம். இல்லையெனில் வேறு தனி சின்னத்தில் போட்டியிடுவோம்” என்றார்.
**திமுக வேட்பாளர் யார்?**
முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சாவூர் தொகுதியில் பலமுறை வெற்றிபெற்றவருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், இந்த முறையும் போட்டியிட சீட் கேட்டுள்ளார். அவரிடம் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரனை சந்தித்துவிட்டுபேசுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பழனிமாணிக்கம் அவரை சந்திக்கவில்லை. இதனால் பழனிமாணிக்கம் மீது ஸ்டாலின் கோபத்தில் இருப்பதால், தஞ்சாவூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் கிருஷ்ணசாமியை நிறுத்துவதற்கு ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார்.
�,