டோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி

Published On:

| By Balaji

தமிழகத்தில் டோல் கேட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் பல பகுதிகளிலும் நடந்த நிலையில், ‘இதுபற்றி தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசினார்.

தமிழக எம்.பி.க்களும் இதுபற்றி நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பினர். இந்த நிலையில் ஜூலை 16 ஆம் தேதி மக்களவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மீதான மானிய கோரிக்கைகளுக்கு பதிலளித்த துறை அமைச்சர் நிதின் கட்கரி,

“சுங்கச் சாவடிகளில் அதிகளவு பணம் வசூலிக்கப்படுவதாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். சுங்கச் சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் பணமானது, கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் சாலை அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. சுங்கக் கட்டண விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும். ஆனால் அவற்றை நிறுத்த முடியாது. உங்களுக்கு தரமான சாலைகள் வேண்டுமானால், அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். அரசாங்கத்திடம் பணம் இல்லை, என்பதால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தமுடியாது” என்று அழுத்தம் திருத்தமாகவே கூறிவிட்டார்.

இது தமிழக எம்.பி.க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு தமிழக எம்.பி.க்கள் மக்களவையிலேயே நிதின் கட்கரியிடம் அவரது பதிலுக்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்தச் சூழலில் ஜூலை 19 ஆம் தேதி காலை தமிழக எம்.பி.க்கள் நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்காக நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டம் முடிந்ததும், தமிழக எம்.பி.க்களை நிதின் கட்கரி தன் அலுவலகத்துக்கு அழைத்தார்.

திமுகவின் ஆ.ராசா, காங்கிரஸின் செல்லகுமார், வசந்தகுமார் உள்ளிட்ட சுமார் பத்து எம்.பி.க்கள் கட்கரியின் அறைக்கு சென்றிருக்கிறார்கள். டீ, காபி, ஸ்நாக்ஸ் கொடுத்து உபசரித்த கட்கரி,

“என்ன தமிழ்நாட்ல மட்டும்தான் நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கும், டோல் கேட்டுகளுக்கும் கடுமையான எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது” என்று கேட்டிருக்கிறார். அப்போது தமிழக எம்.பி.க்கள் தமிழகத்தில் நடக்கும் டோல் கேட் கட்டணக் கொள்ளையையும், அவற்றை பராமரிக்கும் தனியார் நிறுவனங்களின் அராஜகங்களையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்பாக கிருஷ்ணகிரி எம்.பி.யான செல்லகுமார், “கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் போகிற வழியிலேயே டோல் கேட் இருக்கிறது. இதை ஜெயலலிதாவே அகற்ற வற்புறுத்தியும் மோடி முடியாது என்று சொல்லிவிட்டார். இதனால் இப்போதும் மக்களுக்கு கஷ்டம்தான்” என்று சொல்லி மனுவும் கொடுத்திருக்கிறார். இதை மாற்ற முடியுமா என்று பார்க்கிறேன் என்று சொன்ன கட்கரி, ‘என்ன பிரச்சினையாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்” என்று தமிழக எம்.பி.க்களை கூல் பண்ணி அனுப்பி வைத்திருக்கிறார்.

**

மேலும் படிக்க

**

**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share