எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண்ணுடன் கல்வியியல் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்டது. அதில், எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண்ணுடன் கல்வியியல் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதிப்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண் பெற்று, கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதலாம். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண்ணுடன் கல்வியியல் பட்டத்தைப் பெற்றவர்களே ஆசிரியர் தகுதி தேர்வினை எழுத இயலும். இதனால், பலர் இத்தேர்வை எழுத முடியாது. அதனால், பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, எஸ்சி, எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்ணுடன் கல்வியியல் பட்டத்தைப் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கூறினார்.
இந்த வழக்கை நேற்று (ஏப்ரல் 1) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.�,