“ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நான் நடிப்பதை மிகுந்த பெருமையாகக் கருதுகிறேன்” என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவருகிறது. நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தப் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். தற்போது இந்தக் கூட்டணியில் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரகாஷ்ராஜ் இந்தப் படம் குறித்து கூறுகையில், “வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நானும் நடிப்பதை மிகுந்த பெருமையாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகருடன் பல காலம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் விஜய் விக்ரம், “பிரகாஷ் ராஜ் வரும் காட்சிகள் படத்துக்குப் பக்கபலமாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கான ஒளிப்பதிவு பணியை குகன் எஸ்.பழனியும், படத்தொகுப்பை பிரபாகரும் மேற்கொள்கின்றனர். ஹர ஹர மகாதேவகி படத்தில் பணிபுரிந்த பாலமுரளி பாலு இசையமைக்க, பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.�,