மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது.
“ஆட்சியைத் தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடுமையான முயற்சிகளில் இறங்கிவிட்டார். தமிழக சட்டமன்றத்துக்கு 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பதவியேற்புக்குப் பின் சட்டமன்றம் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது.
ஏற்கனவே சபாநாயகர் தனபால் மீது திமுக தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பேரவைச் செயலாளரிடம் கொடுத்திருக்கிறார். சட்டமன்றம் கூடும் போது அந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. இப்போதைய நிலவரப்படி தமிழக சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்களில் 233 பேர் இருக்கிறார்கள். நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதால் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். இந்நிலையில் திமுகவுக்கு முன்பிருந்த 88 உறுப்பினர்கள், இப்போதைய இடைத்தேர்தல் மூலம் கிடைத்த 13 உறுப்பினர்கள் என 101 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு வசந்தகுமார் நீங்கலாக 7, முஸ்லிம் லீக் 1 என திமுக கூட்டணியில் மொத்தம் 109 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவர், அண்மையில் சபாநாயகரால் நோட்டீஸ் வழங்கப்பட்ட பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூவர் என ஆறு பேர் அதிமுகவில்தான் இருக்கிறார்களா இல்லையா என்பது விவாதத்துக்கு உரியதாகத்தான் இருக்கிறது. . ஆனால் தேர்தல் முடிவுகளில் அமமுகவுக்கு கிடைத்த தோல்வியால் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூவரும் ஆட்சிக்கே ஆதரவு அளிப்பார்கள் என்றே தெரிகிறது. ஆக இந்த ஆறு பேர், இப்போது இடைத்தேர்தல்களில் ஜெயித்த 9 பேர், சபாநாயகர் தனபால் என மொத்தம் இப்போது அதிமுகவுக்கு 123 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள் . அமமுகவுக்கு என இப்போது தினகரன் மட்டுமே சட்டமன்றத்தில் இருக்கிறார். சபாநாயகரை சேர்த்து மொத்தமுள்ள 233 உறுப்பினர்களில் அதிமுக 123, திமுக 109, அமமுக 1 என்பதே இப்போதைய நிலைமை.
இப்போது சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக வலியுறுத்தாது என்பதே முதல்வருக்குக் கிடைத்திருக்கும் ரிப்போர்ட். இது தவிர, ஸ்டாலின் குடும்பத்தினர் கேரள நம்பூதிரி ஒருவரை வரவழைத்து ஸ்டாலின் ஜாதகத்தைக் கொடுத்து சோழி உருட்டிப் பார்த்திருக்கிறார்கள், இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தேர்தல் நடைபெற்றால் ஸ்டாலினுக்கு தமிழகத்தின் முதல்வர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டிருப்பதாகவும், அதற்கு பாசிட்டிவ் பதில் நம்பூதிரியிடமிருந்து வந்திருப்பதாகவும் முதல்வருக்கு கிடைத்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதன் பிறகு திமுகவின் மூவ்களை தீவிரமாக கண்காணிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியிருக்கிறார். ‘ஆட்சியை தக்க வைச்சுக்கிட்டோம்னு வெளியே நாம சொல்லிக்கிட்டாலும் ரொம்ப இக்கட்டான சூழ் நிலையிலதான் இருக்கோம். திமுக நம்ம கட்சியிலேர்ந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்குறதுக்கான தீவிர முயற்சியில இருக்கிறதா எனக்குத் தகவல் வந்திருக்கு. இனி என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆட்சி முழு காலமும் இருக்கிறதுக்காக நாம என்ன வேணாலும் பண்ணலாம். திமுக செய்யுறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்,. நம்ம ராஜேந்திர பாலாஜி 40 திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு வர்றதுக்கு தயாரா இருக்காங்கனு சொன்னாரே…அவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் இல்லாட்டியும் குறைந்தபட்சம் பத்து திமுக எம்.எல்.ஏ.க்களையாவது நாம இழுக்கணும். மிஞ்சிப் போனா கோர்ட்டுக்குப் போவாங்க. அங்க தீர்ப்பு வர்றதுக்குள்ள பதவிக் காலமே முடிஞ்சுடும். அதனால அதுக்கான வேலைகள்ல இறங்குங்க’ என்று உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே திமுக எம்..எல்.ஏ.க்கள் சிலருக்கு அரசு கான்ட்ராக்ட், அவ்வப்போது பரிசுகள் என்று எடப்பாடி கொடுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்தன. போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய பிரச்னையை ஒட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை வாங்க மாட்டோம் என்று ஸ்டாலின் அறிவித்தார். இது திமுக உறுப்பினர்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை சாக்காக வைத்து அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் அதிமுக தரப்பில் பேசியதாகவும் தகவல்கள் வந்தன. இதையடுத்தே அந்த முடிவை கைவிட்டு ஊதியத்தை பெற முடிவெடுத்தார் ஸ்டாலின். இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திமுக எம்.எல்.ஏ.க்களை உரசிப் பார்த்துக் கொண்டிருந்த அதிமுக இப்போது எடப்பாடியின் உத்தரவின் பேரில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரிக்க தீவிரமாக இறங்கிவிட்டது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)
**
.
**
[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
.
�,”