டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் அட்வான்ஸ் ஓட்டு புக்கிங் திட்டம்!

Published On:

| By Balaji

மொபைலில் டேட்டா ஆன் செய்ததுமே ஃபேஸ்புக் போஸ்ட் செய்திருந்த பதிவுதான் இது.

“கஜா புயல் பற்றிய ஆலோசனை கூட்டம், நியூஸ் ஜெ. ஒளிபரப்பு துவக்கவிழா என ஆளுங்கட்சி பரபரப்பாக இருந்தாலும், அதற்கிடையிலும் அரசியல் நகர்வு ஒன்றையும் சத்தமில்லாமல் செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

20 தொகுதிகளுக்கும் எந்த நேரத்திலும் இடைத் தேர்தல் வரலாம். ஒருபக்கம் இடைத் தேர்தலை எதிர்கொள்ள தினகரன் அணி வேலைகளை முடுக்கி விட்டிருக்க… நேற்று முதல், சுவர் விளம்பரத்துக்கு இடங்களை புக்கிங் செய்யச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர்.

‘பிரச்சாரத்தின் ஆரம்பமே சுவர் விளம்பரங்கள்தான். மத்த கட்சிகள் முந்திக்கிறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும். 20 தொகுதிக்கு உட்பட்ட ஊர்களில் உள்ள சுவர்களை உடனே புக் பண்ணுங்க. இதுக்கான வேலைகளை அமைச்சர்களோ எம்.எல்.ஏ.க்களோ நேரில் சென்று செய்ய முடியாது. அதனால அந்தந்த ஒன்றிய செயலாளர் மூலமாக அந்த வேலைகளை முடுக்கிவிடுங்க.

சுவரை புக் பண்ணி என்ன செய்யப் போறோம்னு சாதாரணமாக நினைக்க வேண்டாம். சுவரை புக் பண்ண நம்ம கட்சிக்காரங்க போகும் போதே சம்பந்தப்பட்ட அந்த வீட்டு ஓனரோடு நட்பு ஏற்படும். ஒரு சுவருக்கு 10 ஆயிரம் என உடனடியாக பணத்தையும் கொடுத்துடுங்க. யாருகிட்டயும் பேலன்ஸ் வைக்க வேண்டாம். தேர்தல் முடியும் வரை ஒரு மாசத்துக்கு பத்தாயிரம் கொடுக்கிறோம்னு சொல்ல சொல்லுங்க.இதனால அந்த வீட்டுக்காரங்களோட ஓட்டுகளை நாம அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வைக்கிற மாதிரிதான். இந்த சுவர் புக் பண்ற வீட்டுக்காரங்க எல்லோருடைய பேரு போன் நெம்பரும் வாங்க சொல்லிடுங்க.

அவங்களோடு ரெகுலராக நம்ம நிர்வாகிகளை பேச சொல்லுங்க. கட்சித் தலைமையில் இருந்தும் அந்த வீட்டுக்காரங்களுக்கு ரேண்டமா போன் பண்ணி செக் பண்ணுவாங்க. அதனால இதுல யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

இன்னைக்கு நாள் நல்லா இருக்கு. இன்றைக்கே பணத்தை கொடுத்து புக்கிங் ஆரம்பிச்சுடுங்க. சுவர் விளம்பரத்துக்கான செலவுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர் மூலமாக கொடுக்கச் சொல்லிடுறேன்…’ என்று சொல்லி இருக்கிறார். சொன்னதோடு மட்டுமல்ல… உடனடியாக ஒன்றிய செயலாளர்களிடம் சுவர் விளம்பரத்துக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

‘இது தோராயமாகத்தான் கொடுத்திருக்கோம். எவ்வளவு சுவர் புக் பண்ணியிருக்கீங்க என லிஸ்டை கொடுத்துட்டு மீதி பணத்தை வாங்கிக்கோங்க… யாரும் தப்பான நெம்பரை கொடுக்க வேண்டாம். எல்லோரையும் செக் பண்ணுவோம்’ என எச்சரித்துவிட்டுத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். நேற்று முதல் சுவர் விளம்பரத்துக்கான புக்கிங் தொடங்கிவிட்டது.

பாப்பிரெட்டிபட்டி, அரவரக்குறிச்சி, திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்லியும் உத்தரவிட்டு இருக்கிறாராம் முதல்வர்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்டதுடன், “சுவர் இருந்தால்தானே சித்திரம்

வரையமுடியும்’’ என்று தலைப்பு கொடுத்து ஷேரும் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்தது வாட்ஸ் அப்.

“தினகரன் அணியைப் பொறுத்தவரை திருப்பரங்குன்றம், திருவாரூருக்கு மட்டும்தான் புதிய வேட்பாளர்கள் .மற்ற தொகுதிக்கெல்லாம் ஏற்கெனவே இருக்கும் ஆட்கள்தான். திருவாரூர் தொகுதி என்பது கலைஞர் தொகுதி என்பதை தாண்டி மன்னார்குடிக்கு அருகே உள்ள தொகுதி என்பதால், டாக்டர் வெங்கடேஷை அங்கே நிறுத்தலாம் என்று தினகரன் கணக்குப் போடுகிறாராம். இது சம்பந்தமாக முக்கிய நிர்வாகிகளுடனும் தினகரன் பேசியிருக்கிறார்.

இதற்கிடையில் திவாகரனும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். திருவாரூரில் தினகரன் யாரை நிறுத்தினாலும் நாம் அவரை தோற்கடிக்கணும். நாம போட்டியிட்டு ஜெயிக்க முடியாது. ஆனால், வெற்றி தோல்வியை நாம நிர்ணயம் பண்ணணும். அதுக்கு எடப்பாடிக்கு சப்போர்ட் பண்ணணும் என தன் ஆதரவாளர்களிடம் சொல்லிவருகிறாராம்” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share