டவுண் சின்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்ட கருவைக் கலைப்பதற்கு உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
டவுண் சின்ட்ரோம் (டவுண்’ஸ் அல்லது ட்ரைசோமி 21 என்றும் அழைக்கப்படும்) என்பது குறிப்பிடத்தக்க உடல் மற்றும் மன நலப் பிரச்னைகளையும் மற்றும் இயலாமைகளையும் உண்டாக்கும் குணமடையாத ஒரு மரபுவழிக் கோளாறாகும். மனித உடலில், குரோமோசோம் 21 கூடுதலாக அமைவதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. காரணம், பெண்ணின் வயது அதிகரிக்கும்போது, டவுண் சின்ட்ரோமுடன் கூடிய குழந்தை பெறும் சாத்தியம் ஏற்படுகிறது. 45 வயதில் கருவுறும் 30 பெண்களில் ஒருவருக்கு மன நலிவுடன் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் அதிகம். முதல் குழந்தை மன நலிவு குறைபாட்டுடன் இருந்தால், அடுத்த குழந்தைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்நிலையில், டவுண் சின்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்ட 26 வாரங்கள் ஆன கருவை கலைப்பதற்கு அனுமதிகோரி 37 வயதாகும் பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எ.பாப்தே மற்றும் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மருத்துவப் பரிசோதனை அறிக்கையை பார்வையிட்ட நீதிபதிகள், கர்ப்பத்தை தொடர்வதால் பிரசவத்தின்போது குழந்தைக்கோ, தாய்க்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவ அறிக்கையில் உறுதிபடக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் இதற்குமுன்பு மும்பையைச் சேர்ந்த பாலியல் வல்லுறவுக்கு ஆளான 22 வயதான பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் 24 வாரக் கருவை கலைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது தாயின் நலன் கருதி உச்சநீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.�,