}ஜெ. தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை: தமிழக அரசு!

Published On:

| By Balaji

“ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்பதால், அரசு செலவில் அவருக்கு நினைவிடம் கட்டுவதில் எந்தச் சட்ட விரோதமும் இல்லை” என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சமாதியில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது, அதற்கான பணிகளும் வேகமாக நடந்துவருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்ட தடை கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அமர்வின் முன்பு நேற்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்தப் பதில் மனுவில், “ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட 2016 டிசம்பர் 7ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டு, 2018 ஜனவரி 10ஆம் தேதி 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மே 7ஆம் தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் மற்ற மூவர் மீதான தண்டனை உறுதிசெய்யப்பட்டாலும், அப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் தண்டனையை கைவிடப்பட்டது. இன்றைய தேதியில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என்பதால், அவருக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக அரசு, தன் அதிகார வரம்புக்கு உட்பட்டது தான் முடிவெடுத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாநிலக் கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்றே நினைவிடம் கட்டுவதால் எந்த விதிமீறல், சட்டவிரோதம் ஏதுமில்லை” எனவும் மனுவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே, சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் வைத்ததை எதிர்த்த மனுவும் தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல இந்த வழக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனையேற்ற நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share