ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், பள்ளிகள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 மையங்களில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம்கள் இயங்கும்.
இன்று சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனை சாவடிகள் ஆகிய இடங்களிலும் போலியோ சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் 67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 2004ஆம் ஆண்டுக்கு பின் தமிழகத்தில் போலியோ தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.�,