சிறப்புப் பார்வை:தமிழகம் முதலும், மூன்றாம் இடமும்!

Published On:

| By Balaji

ர.ரஞ்சிதா

நிதி ஆயோக் குழு வெளியிட்ட நாட்டின் சுகாதார குறியீட்டு அறிக்கையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தச் சுகாதார அறிக்கையில் கேரளா மாநிலம் முதலிடத்தையும், உத்தரப் பிரதேச மாநிலம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

நிதி ஆயோக் (NITI Aayog) என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இந்த நிதி ஆயோக் குழு கடந்த 2015ஆம் ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செயல்படத்துவங்கியது. மேலும் இக்குழுவின் தலைவராக பிரதம inர் நரேந்திர மோடி செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்த குழுஅமைப்பு நாட்டின் சுகாதார குறியீட்டு அறிக்கையைத் தயாரித்துள்ளது.

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நேற்று(பிப்ரவரி 9) இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கை, நாட்டில் உள்ள மாநிலங்களை இரு பிரிவுகளாக (பெரிய மாநிலம் மற்றும் சிறிய மாநிலம்) பிரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

சுகாதாரத்தில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் உத்தரப் பிரதேச மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் ராஜஸ்தான், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்கள் முறையே உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு முந்தைய இடங்களில் உள்ளன.

சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதல் இடத்திலும், மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், கோவா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சுகாதார அறிக்கையை வெளியிட்டு, சுகாதாரத்துறையில் கூட்டுறவு மற்றும் போட்டி கூட்டாட்சி முறையை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக செயல்பட்டு, சுகாதார விளைவுகளை அடைவதற்கான வேகத்தை இந்தக் குறியீட்டு அறிக்கையானது அதிகரிக்கும்” என அமிதாப் காந்த் பேசினார்.

இந்தியாவில் சுகாதாரத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக அறிவிப்பு வெளியான இதேநேரத்தில் டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இந்தியாவில் டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு(2017) டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாகத் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில், 1.51 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், இதில் டெங்கு பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என இரண்டிலுமே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று நாடாளுமன்றத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு “கடந்த ஆண்டு தமிழகத்தில் 23 ஆயிரத்து 294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்துக்கு அடுத்தபடியாக டெங்குவால் கேரளாவில் 19 ஆயிரத்து 973 பேர் பாதிக்கப்பட்டு அதில் 37 உயிரிழப்புகளும், கர்நாடகாவில் 17 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டு அதில் 5 உயிரிழப்புகளும், மேற்கு வங்கத்தில் 10 ஆயிரத்து 697 பேர் பாதிக்கப்பட்டு அதில் 19 உயிரிழப்புகளும், டெல்லியில் 9 ஆயிரத்து 232 பேர் பாதிக்கப்பட்டு அதில் 9 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் பதிவாகியுள்ளது.

மேலும் பஞ்சாபில் 15 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டதாக பதிவான நிலையில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. நாடு முழுவதும் 253 பேர் டெங்கு பாதித்து உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டிலும் இதுவரை தமிழகத்திலேயே அதிகபட்சமாக 813 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக” மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் ஆண்டில் 2, 3 மாதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், தற்போது ஆண்டு முழுவதும் டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் இருக்கின்றன. அதனால்தான் தமிழகத்தில் ஆண்டு முழுவதும் டெங்கு பாதிப்பு காணப்படுகிறது.

டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் வகைக் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சுற்றுச்சூழல் இருக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு பற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறை மூலம் தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு செய்து வந்ததாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share