பெருமாள்முருகன்
*(நியூஜெர்சியில் லுங்கி அணிந்தவாறு டி.எம்.கிருஷ்ணா கச்சேரியில் பாடியதால் ஏற்பட்ட சர்ச்சையை [நேற்று வெளியான கட்டுரையில்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/21/21) பார்த்தோம். அந்தக் கச்சேரியில் கிருஷ்ணா பாடியது குறித்து இன்று…)*
சில மாதங்களுக்கு முன்னர் ஐந்து பறவைகளைப் பற்றி ஐந்து கீர்த்தனைகள் எழுதி அவருக்குக் கொடுத்திருந்தேன். காக்கை, குயில், ஆந்தை, சிட்டு, பனங்காடை ஆகிய பறவைகள். இந்தப் பறவைகளில் குயில் அல்லது சிட்டுக்குருவி பற்றிய பாடலைத்தான் ஒருவர் முதலில் தேர்ந்தெடுப்பார். ஆனால் கிருஷ்ணா வேறுபட்ட ரசனை கொண்டவர். ஆகவே அவர் எந்தப் பாட்டை முதலில் தேர்வு செய்து பாடுவார் என்னும் எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. சென்னை, குரோம்பேட்டை கல்சுரல் அகாடமி சார்பில் ஸ்ரீகாமாட்சி கல்யாண மண்டபத்தில் 24-06-18 அன்று நடைபெற்ற கச்சேரி ஒன்றுக்கு நானும் சென்றிருந்தேன். கச்சேரிக்கு வருவதாக அவரிடம் பேசியில் தெரிவித்தேன். அப்போது ‘உங்கள் காக்கைப் பாட்டை முதலில் பாடலாம் எனத் தயாரித்திருந்தேன். ஆனால் ஆந்தைப் பாட்டைப் படித்தபோது அது மிகவும் பிடித்திருந்ததால் அதைத்தான் பாடப் போகிறேன்’ என்று சொன்னார். அதே போலச் சென்னைக் கச்சேரியில் ஆந்தைப் பாட்டைப் பாடினார். ரீதிகௌளை ராகத்தில் கிருஷ்ணாவே மெட்டமைத்திருந்தார். அதன் முதல் அரங்கேற்றமே அருமையாய் அமைந்தது. அக்கச்சேரியைக் கேட்ட ரசிகர் ஒருவர் (அரவிந்தன் முதலியார்) ஆந்தைப் பாட்டை விதந்தோதி முகநூலில் எழுதினார். அவர் எழுதிய பகுதி வருமாறு:
**புதுமைக்கு வரவேற்பு**
“கிருஷ்ணா இசை என்றாலே மயிலிறகு வருடல். அதிலும் இந்த ரீதிகௌளை தேனில் தோய்த்த மயிலிறகு வருடல். சொல்லி மாளாது என்கிற சொற்றொடருக்குச் சரியான விளக்கம் கிருஷ்ணா ஆலாபனை… பாடல் என்னவோ என்று அனைவரும் எதிர்நோக்க… எதிர்பார்த்தாற்போல் கிருஷ்ணா ‘இருட்டுக்கும் குரல் உண்டு ஆந்தையின் அலறல் அது’ என்று ரீதிகௌளையில் பெருமாள்முருகன் இயற்றிய பாடலைப் பாட , அவையில் மாமா மாமிகள் புருவங்கள் நெற்றியை விஞ்சியது. ஆனால், கிருஷ்ணா பாடப் பாட வரிகளின் தாக்கம், இசையின் ஆதிக்கம் அனைவரையும் மெய்மறந்து கேட்கச் செய்தது. இருளின் கனத்தை உடைத்து, வெறுத்தால் அமைதி கலைத்து, இருள் பயம் தரும், பயம் போக்கி பேசும், உருட்டி விழிக்கும் கண்கள், உருளும் பந்தாய் மிளிரும், விருட்டென வாய் திறந்து விரட்டி, மனதை திறந்தால், சிரிக்கும் மழை போல, இருளை உருக்கி, நெஞ்சில் வளர்ப்போம் என வரிகள் நம்மை மிரள வைக்க, இதற்கு எப்படித்தான் மெட்டமைத்துப் பாடுகிறாரோ என மலைத்தோம். கிருஷ்ணா கச்சேரியில் மலைப்புக்குப் பஞ்சமில்லை. ஆம், ஆந்தையின் அலறல் அது – வரிகளில் ஸ்வரமும் பாடி அசத்தினார் மனிதர். இங்குதான் இவரது மேதைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். பாடல் வெகுஜனங்களுக்கானது. சமூகத்தால் பெரிதும் போற்றப்படாத இருட்டையும் ஆந்தையின் அலறலையும் மையப்படுத்தி எழுதப்பட்ட பாடலைக் கர்னாடக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது சாதாரணக் காரியமல்ல. அவர்களின் ஈடுபாட்டைப் பெற கிருஷ்ணா கையாண்ட யுக்தியே ஆந்தையின் அலறல் அது ஸ்வரம். மொத்தத்தில் ரீதிகௌளையில் எத்தனையோ பாடல் கேட்ட நமக்கு ‘இருட்டுக்கும் குரல் உண்டு’ சிலிர்ப்பைத் தந்தது. பாடல் முடிந்ததும் பெருமாள்முருகன் அவர்களை அரங்குக்கு அறிமுகம் செய்தார் கிருஷ்ணா. அனைவரும் மனமுவந்து கைதட்டியது தமிழிசைக்கும் பக்தியையும் விஞ்சிப் சமூகப் பார்வையும் இந்த சங்கீதவடிவில் ஏற்கப்படும் என்பதற்குச் சான்றாய் விளங்கியது.”
கர்னாடக சங்கீத ரசிகர்கள் அதில் புதுமையையும் விரும்பி ஏற்கிறார்கள் என்பதற்கு இந்தப் பதிவே சாட்சி.
அக்கச்சேரியில் நான் அறிமுகப்படுத்தப்பட்டபோது ரசிகர்கள் அளித்த கைதட்டலில் அவர்களின் ஏற்பும் பாராட்டும் பிரதிபலித்தன. அப்பாட்டைத்தான் அமெரிக்காவின் நியுஜெர்சியில் இரண்டாம் முறை பாடினார். ராகம், கீர்த்தனை, ஸ்வரம், நிரவல் என விரிவுபடுத்திக் கற்பனையின் பேராற்றல் புலப்படும்படி அவர் பாடியதைக் கேட்டுப் பிரமித்துப்போனேன். கீர்த்தனையின் உயிரான சொற்களைக் கண்டுகொள்ளும் நுட்பமும் அச்சொற்களுக்குத் தம் கற்பனையால் உயிரூட்டி விடும் வல்லமையும் கொண்டவர் கிருஷ்ணா. ‘பொருட்டாக்கிக் கேட்டால் பலபொருள் உணர்த்தும் மொழியாகும்’ என்னும் தொடரையும் ‘விரித்து மனதைத் திறந்தால் சிரிக்கும் குழந்தைக் குரல்போல்’ என்னும் தொடரையும் அவர் பாடியபோதுதான் அவையே கீர்த்தனையின் உயிர்நாடியான இடங்கள் என எனக்கே புரிந்தது.
இந்தப் பாடலில் எதுகைக்குப் பயன்படுத்திய எழுத்து ‘ரு.’ ஆந்தை கண்களை உருட்டுவதற்கு வாகாக இந்த எதுகை எதேச்சையாக அமைந்தது. ஸ்வரத்தைப் பின்னல் போல அமைத்துக் கீழ்ஸ்தாயியில் கிருஷ்ணா பாடிய போது இருட்டும் ஆந்தையும் அத்தனை அழகாய் மனதிற்குள் பதிந்தன. இது கீர்த்தனையின் தன்மைக்கேற்ற ஸ்வரம். இந்தப் பாடலைப் பாடிய விதம் பற்றி ராஜேஷ் கார்கா எழுதிய குறிப்பையும் இங்கே தருவது பொருந்தும்:
‘பொதுவாகக் கர்னாடக இசையில் பெரும்பாலும் பக்தி சார்ந்த பாடல்களே பாடப்பெறும். மிகக் குறைவான அளவில் ஜாவளி போன்ற வடிவங்களில் காதல் பாட்டுகள் இடம் பெறும். அல்லது கச்சேரியின் இறுதிப் பகுதியில் பாரதியார் பாடல்கள் போன்ற நாட்டுப்பற்றுப் பாடல்கள் இடம் பெறும். இவ்வகையில் இல்லாத பாடல்கள் மிகவும் அரிதே. இந்தக் கச்சேரியில் பாடிய பாடல் ஒரு பறவையைப் பற்றிய பாடல். அதுவும் பொதுவாக அதிகம் பேசப்படாத ஆந்தையைப் பற்றிய பாடல். ஆந்தையின் கண்கள் பற்றியும் அதன் அலறல் பற்றியும் அழகாக எழுதப்பட்ட இந்தப் பாடலைப் பாடிக் கேட்கும்போது அத்தனை அற்புதமாக இருக்கிறது. உடன் வாசிக்கும் கலைஞர்கள் ஸ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் இந்தப் பாடலின் தன்மையை உணர்ந்து வெகு அழகாக வாசித்தனர். குறிப்பாக இருளின் தன்மையைக் கொண்டுவர மிருதங்கத்தில் ஒருபக்கம் மட்டும் கொண்டு அருண்பிரகாஷ் வாசித்த இடங்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.’ (இலவசக் கொத்தனார்).
**மரபார்ந்த ரசிகர்களின் ஈடுபாடு**
இந்தப் பாடலைக் கிருஷ்ணா பாடும்போது என்னருகில் இருந்த முதிய தம்பதியினரை உற்றுக் கவனித்தேன். அவர்கள் என்னைக் கவனிக்கவேயில்லை. ரீதிகௌளையின் நுட்பங்கள் அறிந்த அவர்கள் புதிய கீர்த்தனையைக் கேட்கும் பரவசத்துடன் ஆழ்ந்து ரசித்தார்கள். அரங்கின் பின்பகுதியையும் கவனித்திருந்தேன். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள். அனைவரும் பாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். பாடலின் நடுவில் கிருஷ்ணா என்னை அறிமுகப்படுத்தியபோது எழுந்த ஆரவாரம் பெரும் உற்சாகம் கொடுத்தது. கர்னாடக சங்கீத அரங்கில் நெடுங்காலத்திற்குப் பிறகு புதுமையின் கீற்றுகள் தென்படுகையில் அதன் எல்லை விரிவாகிறது. மரபான ரசிகர்களுக்கு உற்சாகமும் புதிய ரசிகர்களுக்கு ஈர்ப்பும் உருவாகின்றன. இவற்றைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கச்சேரிக்குப் பிறகு வரும் எதிர்வினைகள் ரசிக வரவேற்பை உணர்த்துகின்றன. கிருஷ்ணா புதுமை செய்கிறோம் என்று காட்டிக்கொள்ள இதைச் செய்வதில்லை. அவர் தம்மோடு ரசிகரையும் அழைத்துச் செல்ல முயல்கிறார். மரபின் செழுமையில் நின்று நவீனத்தை அதற்குள் அவர் இழைக்கும் உத்திகளில் ரசிகர்கள் கட்டுண்டு அவருடன் இயல்பாகச் செல்கிறார்கள்.
இவ்விதம் கர்னாடக சங்கீதத்தின் எல்லைகளை விரிவாக்கும் கலைஞனின் பயணத்தில் சற்றே துணையாக நானும் செல்வதன் காரணமாக அவரது கச்சேரிகளுக்கு இடையூறு வரும் என்பது எனக்கு அயர்ச்சியைத் தருகிறது. இதைப் பற்றிப் பேசியபோது கிருஷ்ணா சொன்னார், “என்னைப் பற்றி வரும் சர்ச்சைகளில் உங்கள் பெயரும் பங்கும் தவிர்க்க முடியாதது.”
கிருஷ்ணாவைப் பொறுத்தவரை இத்தகைய சர்ச்சைகளை அரசியல் தெளிவோடும் துணிவோடும் எதிர்கொள்கிறார். டெல்லி கச்சேரி ரத்து என்னும் செய்தியைக் கேட்டவுடன் “அந்த நாள் டெல்லியில் எந்த இடத்தில் என்றாலும் பாடத் தயார்” என்று அறிவிக்கும் மன வலு கொண்டவர் அவர். நான் கொஞ்சம், கொஞ்சமென்ன, ரொம்பவே பூஞ்சை. அதனால்தான் கச்சேரி ரத்துக்கு நானும் காரணமா என மனம் குமைந்தேன். ஆனால், கிருஷ்ணாவின் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து டெல்லி அரசு கச்சேரிக்கு ஏற்பாடு செய்து கலைஞனைக் கௌரவித்த விதமும் பெருந்திரள் ரசிர்கர்கள் கச்சேரி கேட்கக் குழுமி ரசித்த பாங்கும் கண்டு குமைச்சலிலிருந்து விடுபட்டேன். கிருஷ்ணாவை நினைத்துப் பெருமிதமும் கொண்டேன்.
[**ஆந்தைப் பாட்டு கேட்க:**]( https://youtu.be/D6Q8_YECx08)
பல்லவி
இருட்டுக்கும் குரலுண்டு
ஆந்தையின் அலறலது
பொருட்டாக்கிக் கேட்டால் பல
பொருளுணர்த்தும் மொழியாகும் (இருட்டுக்கும்)
அனுபல்லவி
இருளின் கனத்தை உடைத்து
பெருத்த அமைதி கலைத்துத்
தரும்பயம் போக்கிப் பேசும் (இருட்டுக்கும்)
சரணம்
உருட்டி விழிக்கும் கண்கள்
உருளும் பந்தாய் மிளிரும்
விருட்டென்று வாய்திறந்து
மருட்டி அலறி ஒலிக்கும்
விரித்து மனதைத் திறந்தால்
சிரிக்கும் குழந்தைக் குரல்போல்
இருளை உருக்கி நெஞ்சில்
முருகு பெருக்கி வளர்க்கும் (இருட்டுக்கும்)�,”