பெருமாள்முருகன்
2018 நவம்பர் 17இல் டெல்லியில் விமான நிலையங்கள் ஆணையமும் (AAI) ஸ்பிக் மெக்கே (SPIC – MACAY) நிறுவனமும் இணைந்து நடத்தவிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி ரத்து செய்யப்பட்டது குறித்து ‘The Indian Express’ இணையதளத்தில் தொடர் செய்திகள் வெளியாகின. கச்சேரி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தது. ‘கச்சேரிகளில் பெருமாள்முருகன் எழுதிய கீர்த்தனைகளைப் பாடுதல்’ என்பதையும் கச்சேரி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக ஒரு செய்தி சுட்டிக்காட்டியுள்ளது. அது எனக்குப் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்தது.
கடந்த சில ஆண்டுகளாக எனக்கு டி.எம்.கிருஷ்ணாவுடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அவரை நான் இப்படிப் புரிந்துகொண்டிருக்கிறேன்: ‘தன் கலையின் எல்லைகளை விரிவாக்கும் கலைஞன் டி.எம்.கிருஷ்ணா.’ அத்தகைய அவரது முயற்சிக்குச் சிறு ஆதாரமாக எனது கீர்த்தனைகள் அமைகின்றன. இதைச் சமீபத்திய அவரது கச்சேரி ஒன்றைச் சான்றாக வைத்து விவரிக்க விரும்புகிறேன்.
2018 செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்கள் கச்சேரி, உரை, பயிலரங்கு எனப் பலவித நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக டி.எம்.கிருஷ்ணா அமெரிக்காவில் இருந்தார். அதேசமயம் நல்லூழாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கும் அமைந்தது. அங்கே நடைபெறும் கிருஷ்ணாவின் கச்சேரி ஒன்றிற்காவது சென்று கேட்க வேண்டும் என எண்ணினேன். அக்டோபர் 9 சனிக்கிழமை அன்று நியுஜெர்சி மாநிலம், எடிசனில் அவரது கச்சேரி. அது ஒன்றுதான் எனக்குப் போக வாய்ப்பானதாக இருந்தது. ஆனால் ஒரு பிரச்சினை. அதேநாளில் வாஷிங்டனில் நான் பேசவிருந்த நிகழ்வு ஒன்றை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அது முன்கூட்டியே முடிவானது. என் பத்துநாள் பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த நண்பர் சௌந்தர் ஜெயபாலிடம் ‘கிருஷ்ணாவின் கச்சேரி கேட்க வேண்டும்’ என்னும் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
நண்பர்களிடம் பேசிவிட்டு அவர் சொன்னார், ‘அப்படியானால் நீங்கள் இரண்டு கூட்டம் பேச வேண்டும். சரியா?’ நியுஜெர்சியில் கச்சேரி நேரம் பிற்பகல் 3.30 மணி. எப்படியும் கிருஷ்ணா 6 மணி வரை பாடுவார். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம். அவருக்கு உற்சாகம் வந்துவிட்டால் மூன்று, மூன்றரை மணி நேரம்கூடப் பாடுவார். கச்சேரி முடிந்தாலும் முடியாவிட்டாலும் ஆறு மணிக்குக் கிளம்பிவிட வேண்டும். அருகில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் ஹாரிஸ்பர்க் நகரில் நண்பர் ஒருவர் வீட்டில் இரவு சிறுகூட்டம். அதில் பேச வேண்டும். அங்கேயே இரவு தங்கிவிட்டு மறுநாள் வாஷிங்டன் சென்று அங்கே ஒரு கூட்டத்தில் பேச வேண்டும். அது ஏற்கனவே சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டம். அதை ஞாயிறுக்குத் தள்ளும்போது கிடைக்கும் இடைவெளியாகிய இரவில் இன்னொரு கூட்டம். எனக்கு அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.
அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்து இன்னொரு நாள் நடத்துவதில் உள்ள சிரமங்கள் பெரிது. யாராவது ஒரு நண்பரின் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் பிரச்சினை இல்லை. வாஷிங்டன் நிகழ்ச்சி வெளியே ஓர் அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அதை மாற்றுவதுதான் பிரச்சினை. சனி, ஞாயிறு ஆகிய இரண்டும் விடுமுறை நாட்கள் என்பது சாதகம். எப்படியோ தம் நிகழ்விடத்தை மாற்றி வைத்து என்னைக் கச்சேரி கேட்கச் செய்தனர் வாஷிங்டன் இலக்கிய நண்பர்கள். இரண்டு நிகழ்வுகளில் பேசுவது மட்டுமல்ல, இன்னொரு கோரிக்கையையும் சௌந்தர் வைத்தார். எனது இணையதளத்தைப் (https://perumalmurugan.in) புதிதாக வடிவமைத்திருந்தார் அவர். “கச்சேரியின் போது இரண்டு நிமிடம் ஒதுக்கி இணையதளத்தைத் தொடங்கி வைக்க ஒத்துக்கொள்வாரா கிருஷ்ணா?” என்று சௌந்தர் கேட்டார்.
தொடங்கி வைப்பதில் கிருஷ்ணாவுக்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது என்பதை நானறிவேன். எனினும் கச்சேரி ஏற்பாட்டாளர்கள் விருப்பம் எப்படி இருக்குமோ தெரியாது. ஏற்கனவே அவர் அமெரிக்காவில் உள்ள கோயில் ஒன்றில் பாட ஏற்பாடாகியிருந்த கச்சேரி சிலரது எதிர்ப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டதும் அதற்குப் பதிலாக அதே ஊரில் வேறு நண்பர்கள் வேறிடத்தில் ஏற்பாடு செய்த கச்சேரியில் அவர் பாடியதுமான பிரச்சினை ஒன்று நடந்திருந்தது. ஆகவே ஏற்பாட்டாளர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. இப்படி ஒரு நிர்ப்பந்தத்தைக் கிருஷ்ணாவுக்குக் கொடுக்க வேண்டுமா எனத் தயங்கினேன். எனினும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்காமல் நாமே குழம்ப வேண்டாம் எனத் தோன்றியது. கிருஷ்ணாவிடம் இந்த எண்ணத்தைச் சொன்னபோது ஏற்பாட்டாளர்களிடம் பேசிப் பார்த்துவிட்டு அவர்கள் ஒத்துக்கொண்டால் செய்யலாம் என்றே பதில் சொன்னார். பின் ஓரிரு நாளில் கச்சேரி ஏற்பாட்டாளர்களிடம் (CMANA: Carnatic Music Association of North America, NJ) பேசி ஒப்புதலும் பெற்றார். ஆகவே கச்சேரியில் எனது இணையதளத் தொடக்க நிகழ்வும் இருந்தது.
தீவிர இசை ரசிகரும் டி.எம்.கிருஷ்ணாவின் ஆராதகருமான ராஜேஷ் கார்கா தம் வேலை நிமித்தமாக ஆஸ்டின் (டெக்சாஸ் மாநிலம்) நகரிலிருந்து எடிசனுக்கு வந்திருந்தார். வெள்ளி இரவு பாஸ்டன் நகரிலிருந்து நியுஜெர்சிக்கு ரயிலில் வந்து சேர்ந்து ராஜேஷுடன் தங்கினேன். மறுநாள் இருவருமாகக் கச்சேரிக்குச் சென்றோம். எடிசனின் புறநகர்ப் பகுதியில் பள்ளி ஒன்றின் பிரமாதமான அரங்கில் கச்சேரி. அதற்குச் சிலநாள் முன்னதாக வேறொரு மாநிலத்தில் நடந்த கச்சேரிக்கு லுங்கி அணிந்து வந்து பாடினார் டி.எம்.கிருஷ்ணா எனச் சர்ச்சை ஒன்று தொடங்கியிருந்தது.
நியுஜெர்சி கச்சேரியின் மேடைப் பின்னறையில் அவரை நாங்கள் சந்தித்த போதும் லுங்கி ஒன்றைத்தான் அணிந்திருந்தார். அது கட்டமும் கோடுகளும் போட்ட தமிழ்நாட்டு லுங்கியல்ல. விசாரித்தபோது இலங்கையில் வாங்கிய லுங்கி என்று தெரிந்தது. நவீன வண்ணத்தில் கண்ணைக் கவரும் விதமாக இருந்த அந்த லுங்கி யாருக்கும் பிடிக்கும்தான். நீல நிற லுங்கி. மஞ்சள் நிறத்தில் பூப் போட்ட சட்டை. எல்லைகளை விரிவாக்க முயலும் கலைஞனுக்கு அவை பிடித்ததில் ஆச்சரியமில்லை. வழக்கமாகவே இவ்விதம் புதுப்புது உடைகளை அணிவது அவர் இயல்பு. அந்த லுங்கியோடு மேடை ஏறுவதும்கூட ஒருவகையில் எல்லை கடத்தல் என்றே எனக்குத் தோன்றியது.
மேடையில் தமக்குரிய இடத்தில் அமர்ந்து வழக்கம் போல மடிமீது பெரிய சால்வை ஒன்றை விரித்துக்கொண்டார் கிருஷ்ணா. மரபான சிறுபேச்சுக்குப் பிறகு கிருஷ்ணாவுக்கு வழிவிட்டனர் ஏற்பாட்டாளர்கள். என்னைக் குறித்தும் எனது இணையதளம் பற்றியும் சிறு அறிமுகம் கொடுத்த பிறகு மடிக்கணினியில் பொத்தானைத் தட்டி இணையதளத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுக்காகக் கிருஷ்ணா எழுந்து நின்றபோது பாதம் மூடி நிறைந்திருந்த அவரது லுங்கியின் வண்ணம் எல்லோர் கண்களையும் ஈர்த்தது. நானும் ராஜேஷும் மேடைக்குச் சென்றோம். பொத்தானைத் தட்டினார் கிருஷ்ணா. இரண்டே நிமிடம்தான். கச்சேரிக்கு எந்த இடையூறும் இல்லை. பின்னர் பழையபடி அவர் அமர்ந்து மடிமேல் சால்வை போர்த்திக்கொண்டு கச்சேரியைத் தொடங்கிவிட்டார். இந்தக் கச்சேரிக்குப் பிறகும் கிருஷ்ணாவின் லுங்கிப் பிரச்சினை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாயிற்று.
லுங்கி விவாதம் பற்றிப் பின்னர் என்னிடம் பேசிய போது ‘அதுக்கு நீங்கதான் காரணம். என்பாட்டுக்கு உட்கார்ந்து சால்வையப் போட்டுக்கிட்டுப் பாடியிருப்பேன். வெப்சைட் தொடங்க எழ வெச்சது நீங்கதான். எழுந்து நின்ன போதுதான் லுங்கி எல்லோருக்கும் தெரிந்தது’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கிருஷ்ணா. லுங்கி விவாதம் செய்தவர்களில் பெரும்பாலானோர் அந்தக் கச்சேரியைக் கேட்காதவர்கள். கேட்டவர்கள் எவருக்கும் கிருஷ்ணாவின் லுங்கியைத் தவிர்த்துப் பேசுவதற்குப் பல்வேறு விஷயங்கள் இருந்தன. அதில் மிக முக்கியமானது அவர் பாடிய ‘ஆந்தைப் பாட்டு.’
முதல் கீர்த்தனையையே விஸ்தாரமாக அரை மணி நேரத்திற்கு மேல் பாடினார். என்னருகில் அமர்ந்திருந்த கணவன் மனைவி இருவரும் ஆனந்தமாக ரசித்ததைக் கண்டேன். கர்நாடக சங்கீத ரசனையில் பல்லாண்டு அனுபவம் பெற்ற முதிய தம்பதியினர் அவர்கள். இரண்டாவது கீர்த்தனையின் ராகம் பாடத் தொடங்கியதும் அருகிலிருந்த ராஜேஷ் கார்கா சொன்னார், ‘இது ரீதிகௌளை.’ அந்த ராகம் என்றால் நான் எழுதிய ‘ஆந்தைப் பாட்டு’ கீர்த்தனையைத்தான் பாடுவார் என்று எதிர்பார்த்தேன். அதைத்தான் பாடினார். கச்சேரியின் நடுவிலோ பின்பாதியிலோ என் விருத்தம் அல்லது கீர்த்தனை ஒன்றைப் பாடுவார் என்னும் எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. இரண்டாவதாகவே ஆந்தைப் பாட்டைப் பாடுவார் என எதிர்பார்க்கவில்லை.
(கிருஷ்ணா பாடிய ஆந்தைப் பாட்டும் இன்ன பிற விஷயங்களும், நாளை…)�,”