சத்துணவு ஊழியர்கள்: ஜெ. வாக்குறுதி என்னாயிற்று?

Published On:

| By Balaji

காலமுறை ஊதியம், பணிக்கொடை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 29 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (அக்டோபர் 31) மூன்றாவது நாளாக சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் இதில் ஈடுபடுவதால் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகளுடன் நேற்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமுக முடிவும் எட்டப்படாததால் இன்று கருப்பு உடை அணிந்து சமையல் ஊழியர்கள் மறியல் செய்தனர். சில இடங்களில் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை ஏன் இன்றைய முதல்வர் நிறைவேற்றவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுகுறித்து இன்று கருத்து தெரிவிக்கையில்,

“சத்துணவு ஊழியர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் ஆகியோர் காலமுறை ஊதியம், ஓய்வூதியமாக ரூபாய் 9 ஆயிரம், பணிக்கொடையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அனுமதி மறுத்தும், பெண் ஊழியர்களையும், நிர்வாகிகளையும் கைது செய்தும் காவல்துறையினர் ஜனநாயக விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு போராட்டத்தை முடக்கி வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகாலமாக இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் தள்ளிபோடப்பட்டு வருகிறது. கடந்த 19.2.2016 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியர்கள் ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை எதிர்வரும் ஊதியக்குழுவே பரிசீலிக்கும் என அறிவித்தார். ஆனால் அடுத்த அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை” என்று சுட்டிக் காட்டியிருக்கும் கே.பாலகிருஷ்ணன்,

“அரசுப்பள்ளிகளில் பயிலும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மதிய உணவும், பராமரிப்பும் சேவை நோக்கத்துடன் வழங்கி நிரந்தரப் பணியாற்றி வருகிற இந்த ஊழியர்களின் பிரச்சனையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். . இந்தப் போராட்டத்தின் காரணமாக வெளி ஆட்களை வைத்து உணவு தயாரித்து பரிமாறப்படுவதால் ஏழை மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

எனவே, குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அடக்குமுறைகளை கைவிட்டு, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து, சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதிகளை தமிழக முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share