சத்துணவு பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பாதது ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு சத்துணவுப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். அப்போது தமிழகத்தில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் உள்ளனர் என்றும், 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதும் தெரியவந்தது. அந்த 30 ஆயிரம் காலிப் பணியிடங்களும் இதுவரை நிரப்பப்படவில்லை. ஒரு சத்துணவு ஊழியர் குறைந்தபட்சம் 3 மையங்களுக்குப் பணியாற்றிவருகிறார்.
இதனைக் குறிப்பிட்டு இன்று (ஜூலை 14) அறிக்கை வெளிட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “2014ஆம் ஆண்டிலிருந்து கவனிப்போமானால் சத்துணவு துறையில் ஊழியர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரம் வரை குறைந்திருப்பது தெரிகிறது. அதாவது இப்போது ஊழியர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழாகிவிட்டது. இது பள்ளிகள் மூடப்பட்டதால்தான் நடந்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, “தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் மாணவர்கள் சேரவில்லை என்று பள்ளிகளை மூடுவது நடந்துவருகிறது. மேலும், ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளி என ஆயிரக் கணக்கில் உள்ளன; அவற்றில் பாதிக்கு மேல் மூடப்பட்டுள்ளன. இந்தக் கொடுமைகளுக்கு நடுவில் மாணவர்களே இல்லாமல், ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளும் இருப்பதாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ள அவர்,
“பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டு, பணியாளர் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது என்பது ஒருபுறமிருக்க, காலத்திற்கு ஒவ்வாத மிகக் குறைந்த கூலியில் பணியாற்ற யார்தான் ஆர்வம் காட்டுவார்? இந்தக் கேள்வியும் பணியாளர் குறைவுக்கு ஒரு சிறிய காரணமாயிருக்கலாம். இவ்வளவுக்கும் சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை மிகமிகச் சாதாரணமானது. சத்துணவு அமைப்பளருக்கு ரூ.5200, சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.4800; இது ஊதியக்குழு பரிந்துரைத்த கூலி. இந்தக் கூலி அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதற்குக் குறைவாக சத்துணவு அமைப்பாளருக்கே 4500க்குள்தான் கூலி. காலமுறை ஊதியம் கோரி அவர்கள் போராடிவருகின்றனர். ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியால் 10க்கும் மேற்பட்ட சத்துணவுப் பணியாளர் சங்கங்களை ஒன்றுபடவிடாமல் தடுத்து பிளவுபடுத்தி அந்தக் கோரிக்கையை நிராகரித்து வருகிறது அதிமுக ஆட்சி” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “பள்ளிக் கல்வித் துறையின் போக்கும் நோக்கும் மோடியை அடியொற்றியே இருப்பது புரிகிறது. மேல்சாதியர் தவிர, மொத்தத் தமிழருக்கும் கல்வி மறுக்கப்பட்டிருந்த, அந்த 19ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்திற்கு நம்மைத் தள்ளும் மோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித் துறை?” இல்லையென்றால் அரசுப் பள்ளிகளைப் படிப்படியாக மூடிவருவதேன்? அங்கன்வாடி – சத்துணவுக் காலிப் பணியிடங்களை நிரப்பாதது ஏன்? என்றும் பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
�,”