கொரோனா பரவல் பழியை கோயம்பேடு வியாபாரிகள் மீது போடுவதா?

Published On:

| By Balaji

கொரோனா பரவல் தொடர்பாக கோயம்பேடு வணிகர்கள் – தொழிலாளர்கள் – பொதுமக்கள் மீது பழிபோடுவதை முதலமைச்சர் நிறுத்தவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலமும் பரவல் அதிகரித்துள்ளது.. கோயம்பேடு சந்தைக்குத் தொடர்புடையவர்கள், அவரவர் மாவட்டத்துக்குச் செல்வதன் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று விளக்கமளித்த, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கோயம்பேடு சந்தையை மூடி தற்காலிகமாக மாற்று இடத்தில் அமைக்கப் பலமுறை அரசு சார்பில் எச்சரித்தும் வியாபாரிகள், தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் ஒப்புக்கொள்ளவில்லை. கோயம்பேடு வியாபாரிகள் ஒத்துழைப்பு தராததால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்தது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொரோனா பரவலுக்கு கோயம்பேடு தொழிலாளர்கள் மீது பழிபோடுவதா என்று தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (மே 14) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று குறித்து , சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போதே திமுக எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. முகக்கவசம் வழங்க வேண்டும் எனச் சொன்னபோது , அதனை மறுத்து, “கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது” என்று முதலில் “ஆரூடம்” சொன்ன ஆட்சியாளர்கள், அதன்பிறகு “வந்தாலும் ஆபத்தில்லை” என்றார்கள். நோய்த்தொற்று அதிகரித்து, உயிரிழப்புகளும் வளர்ந்து தொடரும் நிலையில், “நோய்த்தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்” என்கிறார்கள்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதே உரிய நடவடிக்கைகளை எடுக்காமல், அதன்பிறகு “முழு ஊரடங்கு” என புதிய கண்டுபிடிப்பை திடீரென அறிவித்ததால், மக்கள் பதற்றத்துடன் அவசர அவசரமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்க நேர்ந்தது. அப்போதும், நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தியது.

குளறுபடிகளால், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா போரின் முன்கள வீரர்களாகச் செயல்படுவோருக்குப் பரவலாக நோய்த்தொற்று ஏற்படும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. திடீர் முடிவுகளால் மக்களைத் திக்குமுக்காட வைத்து, நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அதுவே நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதை மறைப்பதற்காக, ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லை எனப் பழி போட முயற்சி செய்கிறது.

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை எனப் பழியைத் தூக்கி வணிகர்கள் மீது முதல்வர் போட்டுள்ளார்.

அவசரகதியிலான முழு ஊரடங்கு அறிவிப்பும், அவகாசம் இல்லாத காரணத்தால் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட இடங்களில் வணிகர்களும், மக்களும் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு – அமலாக்க நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளத் தவறிய அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலட்சியமுமே நோய்த்தொற்று பரவுதலுக்கு அடிப்படைக் காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர், “மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்” என்று அறிவியல் அடிப்படை ஏதுமின்றி பொய் வாக்குறுதி அளித்த முதலமைச்சர், இப்போது “நோய்த் தொற்று அதிகமாகி, பிறகுதான் இறங்கும்” என்று குழப்பமான அறிவிப்பை வெளியிடுகிறார். தனது முரண்பாடுகளையும் தவறுகளையும் மறைப்பதற்கு வணிகர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பழிபோடுவதை முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட வாரியாக நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை, நோய்த்தொற்றுக்கான காரணம் ஆகியவற்றை உரிய முறையில் அரசு வெளியிடவேண்டும் என்று பலதரப்பினரும் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லியும், அரசு தரப்பில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன்மை இல்லை. சென்னையிலிருந்துதான் மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா பரவியது எனவும், குறிப்பிட்ட இடம் – மக்கள் – வணிகர்கள் – தொழிலாளர்கள் எனக் குற்றம்சாட்டி, தமிழக மக்களை பேதப்படுத்தி, தேவையற்ற பீதியை உருவாக்குவதை முதலமைச்சர் கைவிடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share