குலசை: இன்று சூரசம்ஹாரம் – பக்தர்கள் பங்கேற்க தடை

Published On:

| By Balaji

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் இன்று (அக்டோபர் 15) நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அதில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோயில் உட்பிராகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

தசரா திருவிழாவையொட்டி, ஒவ்வோர் ஊரிலும் விரதமிருந்து காப்புக்கட்டி பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து வருகின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் தசரா குழுவினர் வீதி, வீதியாகச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி, காணிக்கை வசூலித்து வருவதால், தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

9ஆம் திருநாளான நேற்று (அக்டோபர் 14) இரவு 8.30 மணியளவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோயில் பிராகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். நேற்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோயில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று இரவு 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் கோயில் முன்பாக அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்கிறார்.

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் 10ஆம் நாள் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share