கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும், மதுரையில் தொல்லியல் துறையின் கிளை அலுவலகம் ஏற்படுத்தவும், கீழடியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வைகை நதி கரையோரத்தில் கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்துள்ளன. இந்த அகழாய்வுப் பணிகளின் போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சமீபத்தில், நான்காம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான ஆய்வறிக்கையை, ”கீழடி – வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” என்ற தலைப்பில் தொல்லியல் துறை வெளியிட்டது, அதில், தமிழர்களின் நாகரீகமானது 2600 ஆண்டுகளுக்குப் பழமையானது என்றும் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கீழடி விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (பொறுப்பு) பிரஹலாத் சிங் பட்டேலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தை திமுக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் இன்று (செப்டம்பர் 23) பிரஹலாத் சிங் பட்டேலைச் சந்தித்துக் கொடுத்துள்ளனர்.
அக்கடிதத்தில், ”தமிழர்களின் சங்க காலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்கிற அரிய கண்டுபிடிப்பை, கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் அறிந்து கொண்டது தொடர்பாக, உங்களின் மேலான கவனத்திற்கு இதை நான் கொண்டு வருகிறேன். இந்த அரிய கண்டுபிடிப்பானது, கலாச்சார வரலாற்றில், மிகப் பெரும் திருப்புமுனை என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை.
தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட, 4ஆம் கட்ட அகழாய்வு அறிக்கை, தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரியச் சாட்சியமாக அமைந்துள்ளது. மேலும், தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதை, மறுக்கமுடியாத சான்றாகத் தெரியவந்துள்ளது. இந்திய வரலாற்றையே, இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்து தான், முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
கீழடியில், நான்காவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வின் கண்டுபிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவை, அமெரிக்காவிலும், இத்தாலியிலும் உள்ள புகழ் வாய்ந்த சோதனை கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் , மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள், வேளாண் சமூக அமைப்புகள் அப்போதே இருந்து வந்துள்ளதற்கான தேவையான அனைத்து சான்றுகளும், அகழாய்வின் கண்டுபிடிப்பில் இருந்ததாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவைகளை வைப்பதற்காக, உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.
கீழடிக்குப் பிறகு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப்போல கீழடி அகழாய்வுப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் சென்னை மண்டல அலுவலகத்துடன் தென் தமிழகத்திற்காக, மதுரையிலும், தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
கீழடியில், அகழாய்வு பணிகள் துவக்கப்பட்ட அதே கால கட்டத்தில், குஜராத் மாநிலம் வாட் நகரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படத் திட்டமிட்டுள்ளதைப் போல, கீழடியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி, ”இக்கடிதம் குறித்து பரீசிலித்து் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்” என்று தெரிவித்துள்ளார்.
�,”