காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் முடக்கப்பட்டதா?

Published On:

| By Balaji

கடந்த ஜூலை 2ஆம் தேதி கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும், 5ஆம் தேதி கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இதுவரை செயலற்ற அமைப்புகளாக உள்ளன என்று காவிரி உரிமை மீட்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

நேற்று (ஜூலை 12) காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள பெ.மணியரசன், “உச்ச நீதிமன்றம் இறுதி செய்து அளித்த தீர்ப்பின்படி கர்நாடகத்தின் நான்கு அணைகள், தமிழ்நாட்டின் மூன்று அணைகள், கேரளாவின் ஓர் அணை ஆகியவற்றில் தண்ணீரைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. ஆனால், கடந்த ஜூன் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அந்தப் பணியைச் செய்யவில்லை.

சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டிய ஜூன், ஜூலை மாதங்களில் இந்த எட்டு அணைகளையும் ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் எட்டிக்கூட பார்க்கவில்லை. பெங்களூரில் தலைமையகம் வைத்து அங்கேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும், அதன் முழுநேர உறுப்பினர்களும் பெங்களூரில் தங்கவில்லை.

இவ்வாண்டு கர்நாடக அணைகளில் ஜூன் மாதம் முதல் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய தண்ணீரை உரிய கால வரையறைப்படி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் திறந்துவிட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்கியிருக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமாரிடம், ஜூலை மாதத்திற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்கிறது” என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார். இதைச் சுட்டிக் காட்டியிருக்கும் மணியரசன்,

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமர்த்த வேண்டிய முழு நேரப்பணி அதிகாரிகளை நியமிக்காமல் வேறொரு வேலையில் முழு நேரமாக உள்ளவர்களைக் கூடுதல் பணி செய்வோராக ஆணையத்திற்கும் ஒழுங்காற்றுக் குழுவிற்கும் இந்திய அரசு அமர்த்தியுள்ளது. நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காக இவ்விரு அமைப்புகளையும் முடக்கி வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, கர்நாடக அணைகள் உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டதால் அந்த மிகை வெள்ள நீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு. வெள்ள அபாய காலத்தில் அணைகளை நேரடியாகப் பார்வையிட்டு மிகை நீரைத் திறந்துவிட ஆணை இட வேண்டிய ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடகம் வராதது ஏன்? ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடக அரசிடம் தனது அதிகாரத்தைத் தாரை வார்த்து விட்டனவா?” என்று கேட்டிருக்கிறார்.

கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் ஆவியாகப் போகும் நீரின் அளவு, நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் உள்ளிட்ட எல்லா புள்ளி விவரங்களையும் திரட்டித் தருமாறு, இந்த மாநிலங்களைக் கேட்டுக்கொண்டு 05.07.2018 அன்று கூட்டத்தில் படிவம் கொடுத்துள்ளது ஒழுங்காற்றுக் குழு. நிரப்பப்பட்ட படிவங்களை 16.07.2018க்குள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதை மேற்கோள் காட்டியுள்ள மணியரசன், “உண்மையில் இந்த விவரங்களை காவிரி ஒழுங்காற்றுக் குழுதான் தனது நேரடி ஆய்வில் திரட்ட வேண்டும். அதைச் செய்யாமல், ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள மாநிலங்களை இந்த விவரங்களைத் தரச் சொன்னது சரியா? நீதியா? இதில் உண்மை விவரங்கள் வரும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

மிகை வெள்ளம் வரும் இந்தப் பருவத்தில் செயல்படாத மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் பருவமழை குறையும் காலத்தில் செயல்படுமா என்ற வினா எழுகிறது. தமிழ்நாடு அரசு இப்போதுகூட செயல்படவில்லை என்றால் எப்போது செயல்படும்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share