திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணையில் இயற்கை அழகை கண்டு ரசிக்க பார்வை மாடம் மீண்டும் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.
களக்காடு தலையணை என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள ஓர் இயற்கை எழில் மிகுந்த இடம். இந்த இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய உயிரினங்கள் பல வாழ்கின்றன.
இந்த இடத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கார், வேன், மோட்டார் சைக்கிள்களில் வந்து செல்கின்றனர். அங்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் நபர் ஒருவருக்கு ரூ.40 வீதம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
களக்காடு தலையணையில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள பூங்காவிலும் அமர்ந்து பொழுதை கழிக்கின்றனர். தலையணையில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், கடந்த 14.3.1986 அன்று பார்வை மாடம் கட்டப்பட்டது. சுமார் 30 அடி உயர பார்வை மாடத்தின் மீது நின்று சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகையும், வனவிலங்குகளையும் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு களக்காடு தலையணையில் உள்ள பார்வை மாடத்துக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு செல்வதற்கான பாதையும் மூடப்பட்டது. இதனால் தலையணைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பார்வை மாடத்துக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
எனவே களக்காடு தலையணையில் காட்சிப்பொருளான பார்வை மாடம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுமா என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
**-ராஜ்**
.