இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் மகளான பவித்ரா விரைவிலேயே கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
முன்னணி நடிகர்களின் வாரிசுகள் மட்டும்தான் சினிமாவில் நடிக்க வேண்டுமா ஏன் நாங்களெல்லாம் நடிக்கக் கூடாதா எனும் ரேஞ்சில் சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வாரிசுகளும் தற்போது சினிமா களத்தில் குதித்து வருவதைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது சினிமாவுக்கு வருகைதர தயாராகிவருபவர் பவித்ரா.
தெலுங்கு பட உலகின் முன்னணி வெற்றி இயக்குநரான பூரி ஜெகன்நாத்தின் மகளான இவரை கதாநாயகியாகக் களமிறக்க ஆயத்தமாகிவருகிறார் பூரி ஜெகன்நாத். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துவந்த இவரின் மகன் ஆகாஷ் சமீபத்தில்தான் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்த நிலையில் இவரின் மகளான பவித்ராவும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இதற்கான பணிகளில் இறங்கியுள்ள பவித்ரா, கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள மற்றும் நடிப்புத்திறனை வெளிப்படுத்தக்கூடிய கதையுள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பூரி ஜெகன்நாத்தும் தனது மகளின் நடிப்புக்குத் தீனி போடும் விதமான ஒரு கதையை உருவாக்கிவருவதாகவும் அதில் பவித்ரா விரைவிலேயே நடிப்பார் எனவும் கூறுகிறது சினிமா வட்டாரம்.
பவித்ராவுக்கு சினிமாத் தொடர்பு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ள இவர், முன்னதாக இவரது அப்பா இயக்கத்தில் வெளியான பைசா வசூல் படத்தில் அவரிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவர் கதாநாயகியாக களமிறங்கும் பட்சத்தில் நிச்சயம் தமிழ் சினிமா பக்கமும் ஒரு ரவுண்டு அடிப்பார் எனத் தாராளமாகக் கூறலாம்.�,”