தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 750 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016-17 ஆம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 809 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாததால் அங்கு கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தால், தற்காலிக ஏற்பாடாக பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இப்போது கூட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 1474 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை மாதம் ரூ.7,500 என்ற ஊதியத்தில் தற்காலிகமாக நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், இதில் கூட கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் கணினி அறிவியல் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு தலைமுறை கணினி அறிவியல் பாடத்தில் அரையாண்டுத் தேர்வு எழுதப் போகிறது. இன்னும் சில மாதங்களில் இவர்கள் ஆண்டு பொதுத்தேர்வையும் எழுதுவர்.
கணினி அறிவியல் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் அப்பாடத்தின் தேர்வை எழுதும் மாணவனால் எதை சாதிக்க முடியும்? அம்மாணவன் எவ்வாறு தேர்ச்சி பெற்று உயர்கல்விக் கற்கச் செல்வான்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழகத்தில் முதன்முதலில் 1999-2000 ஆவது ஆண்டில் 1197 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1880 கணினி ஆசிரியர்கள் மாதம் ரூ.4000 ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் 1348 பேர் 2010ஆம் ஆண்டில் சிறப்புப் போட்டித் தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்யப்பட்டனர். மீதமுள்ள 652 பணி நீக்கப்பட்ட போதிலும், உச்ச நீதிமன்ற ஆணைப்படி அவர்களுக்கும் 2016ஆம் ஆண்டில் பணி நிலைப்பு வழங்கப்பட்டது. இவர்களைத் தவிர வேறு கணினி ஆசிரியர்கள் எவரும் இன்று வரை முறைப்படுத்தப்பட்ட வகையில் நியமிக்கப்படவில்லை” என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
“அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 748 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போதிலும், அது இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர் தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நலன் கருதியும், மாணவர்கள் நலன் கருதியும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை முதலில் தற்காலிகமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தரமாகவும் அரசு நிரப்ப வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.�,