கஜா புயலினால் தமிழகத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு சீரடைய இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறியது. கஜா என்று பெயரிடப்பட்ட இந்த புயல், நள்ளிரவு 12.30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் அதிராம்பட்டினத்தில் புயல் பாதிப்பு இருந்தது. புயல் கரையைக் கடந்தபோது, நாகை மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றது.
**முதல்வர் அறிவிப்பு**
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இன்று செய்தியாளரைச் சந்தித்தார். “புயல் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான மற்றும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 471 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரையோரப் பகுதிகளில் சேதம் குறித்து ஆய்வு நடைபெற்றுவருகிறது. சேதம் குறித்த அறிக்கை அரசுக்கு கிடைத்த பின்னர் மீனவ மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். தற்போதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக 405 நடமாடும் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
வர்தா புயலின்போது மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய நிதி முழுமையாக கிடைத்ததா என்ற கேள்விக்கு, “நாம் கோரிய நிதியை முழுமையாக மத்திய அரசு அளித்தது இல்லை. தற்போதைய மத்திய அரசு என்றில்லை; முந்தைய மத்திய அரசும் புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு முழுமையான நிதியை வழங்கியதில்லை. குறிப்பிட்ட அளவு நிதியைதான் மத்திய அரசு ஒதுக்கியது, மாநில அரசின் நிதியைத்தான் செலவு செய்துகொண்டிருக்கிறோம்” என்று பதிலளித்தார்.
**மின் கம்பங்கள் சாய்வு**
நாகையில் 5,000 மின் கம்பங்கள், திருவாரூரில் 4,000 மின் கம்பங்கள், தஞ்சையில் 3,000 என மொத்தம் 12,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.இவற்றைச் சரிசெய்யும் பணி போர்க்கால அடிப்படையில் செய்யப்படுமென்று தெரிவித்துள்ளார் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி.
நாகை மாவட்டத்தில் மின் இணைப்பைச் சரிசெய்ய இரண்டு நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 82,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தின் பல பகுதிகளில், மக்கள் பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை அருகே பாலவேளி கிராமத்தில், கஜா புயலால் ஏற்பட்ட சூறைக்காற்றில் 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. நாகை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
**அரசு நடவடிக்கை**
கஜா புயலால் மின் கம்பங்களைச் சரிசெய்து, மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் உத்தரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் விரைவில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
**பலி**
கஜா புயலினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஆனந்தன் (40) என்பவரும், விருத்தாசலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் (45) என்பவரும் உயிரிழந்தனர். வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் மின்னல் தாக்கி பேபி அம்மாள் (75) என்பவரும், தஞ்சாவூர் சிவக்கொல்லை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரமேஷ், தினேஷ், சதீஷ், அய்யாதுரை ஆகிய 4 மாணவர்களும் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்தில் பிரியாமணி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.
சுவர் இடிந்து விழுந்ததில் சிவகங்கையைச் சேர்ந்த முத்து முருகன் என்பவரும், முறிந்து கிடந்த மரத்தில் மோதியதில் பண்ருட்டியைச் சேர்ந்த ரெங்கநாதன் உயிரிழந்தனர். பிரியாமணியின் தந்தை துளசி, தாய் லட்சுமி, சகோதரி பிரியதர்ஷினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
**விடுமுறை**
திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், கடலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பத்தூர், விழுப்புரம், கரூர், சேலம், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
**வானிலை**
தீவிர புயலாக இருந்த கஜா, தற்போது வலுவிழந்துள்ளது. கஜா புயலின் வலு குறைந்தாலும், 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். தற்போது, திண்டுக்கல் அருகே நிலை கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது. அடுத்த 3 மணி நேரத்தில் இது வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் பெருமழை பெய்யும். நவம்பர் 18இல் தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதென்று தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
**புதுச்சேரி**
“புயலால் ஏற்பட்ட சேதங்கள் அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும் என்பதால், புகைப்படம் வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும். அதில் தேதியும் நேரமும் பதிவாகியிருக்க வேண்டும். நிவாரணத்துக்காக மத்திய அரசுக்கு அனுப்ப இந்த ஆதாரங்கள் கண்டிப்பாகத் தேவை” என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
**அதிகாரிகளுக்கு உத்தரவு**
கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். கடலூர் மாவட்டத்தில் சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், காவல் துறைக் கண்காணிப்பாளர் சரவணன் உட்படப் பல அதிகாரிகள் இரவு பகலாகப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல நாகை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், காவல் துறைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட சிறப்பு அதிகாரி ஜவகர் ஐ.ஏ.எஸ் மூவரும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டனர்.
நேற்று (நவம்பர் 15) மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, உயிர்ச் சேதம் ஏதும் இல்லாமலும் சாலைகள் துண்டிக்கப்படாமலும் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து கடலூர், நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அதன்படி அந்தந்த மாவட்ட போலீசார்.
**போலீசார் ரோந்து**
சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன், தனது லிமிட்டில் உள்ள காவல் துறை ஆய்வாளர்களைத் தொடர்புகொண்டு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தங்கியிருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள், ஆதரவற்றவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைக்குமாறு உத்தரவிட்டார்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார், இரவு முழுவதும் அப்பகுதியை வலம் வந்தார். “போலீஸ் வாகனங்களில் போதுமான ஆயுதங்கள் வைத்திருங்கள், சாலையில் மரம் விழுந்தால் உடனே அப்புறப்படுத்துங்கள். ஆதரவற்றவருக்குப் பாதுகாப்பு அளிக்காமல் இருந்தால், புயலால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகிவிடும் ஆபத்து உண்டு” என்று போலீசாரிடம் அறிவுறுத்தினார்.
**விமான பாதிப்பு**
திருச்சி பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், சென்னை – திருச்சி விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 36 பேருடன் திருச்சி சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. காற்றின் வேகம் குறைவதைப் பொறுத்து விமான சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
�,”