எழுவர் விடுதலை: அமெரிக்காவிலிருந்து ஒலிக்கும் குரல்!

Published On:

| By Balaji

எழுவர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அமெரிக்காவின் நார்விச் நகர மேயர் கடிதம் எழுதியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆர்ப்பாட்டங்கள், அஞ்சல் அட்டை அனுப்புதல், சைக்கிள் பேரணி என வெவ்வேறு வடிவங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி அமெரிக்காவின் நார்விச் நகர மேயர் பீட்டர் ஆல்பர்ட் நிஸ்ட்ரோம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில், “28 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருக்கும் ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்த புலனாய்வில் கலவையான தடயங்களும், முரண்பட்ட அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஏழு பேரும் அப்பாவிகள். எனவே அவர்கள் ஏழு பேரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ அவர்களின் விடுதலையை மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய செயலும், மன்னிப்பும், கருணையும் வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும். இது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, நீதியரசர் கிருஷ்ணய்யர் வழியில் மனித உரிமைக்காகப் போராடும் அனைவரின் கனவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் எழுவர் விடுதலைக்கான கையெழுத்து இயக்கத்தை நடத்திவரும் கார்த்திகேய பிரபு நடராஜன், ஜெயகணேஷ், கார்த்திகேயன் தெய்வீகராஜன் ஆகியோரிடம் இந்தக் கடிதத்தை அளித்துள்ளார். முன்னதாக ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க வாழ் சீக்கியர்களும் தமிழக ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share